சிரியூரில், யானைகள் வராமல் தடுக்க ரூ5 லட்சத்தில் அகழி: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு
ஊட்டி: யானைகள் ஊருக்குள் வராமல் பாதுகாக்க பழக்குடியினர் நலன் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 2013-2014-ம் ஆண்டில் யானை அகழி அமைத்தல் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார் நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்.
அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை பாழாக்கி, அத்தோடு உயிர்ப்பலியும் வாங்குவது வழக்கமாகி வருகிறது. அதனை தடுக்கும் வகையில், ஊட்டி வட்டாரம், கூக்கல் ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியினர் வசிக்கும் சிரியூர் கிராமத்தில் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க ரூ 5 லட்சம் செலவில் அகழி கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது.
இது குறித்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
‘ஊட்டி வட்டாரம், கூக்கல் ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியினர் வசிக்கும் சிரியூர் கிராமத்தில் யானைகள் ஊருக்குள் வராமல் பாதுகாக்க பழங்குடியினர் நலன் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 2013-2014-ம் ஆண்டில் யானை அகழி அமைத்தல் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிரியூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை அடையாள அட்டை பெற்ற மக்களைக் கொண்டு நடப்பாண்டில் செயல் படுத்தப்படும். இப்பணியை மேற்கொள்ளும்போது சுமார் 65 பழங்குடியினர் குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கக்குச்சி ஊராட்சிகுட்பட்ட ஒன்னதலை மெயின் சாலை முதல் கோயில்மேடு கட்டபெட்டு வரை சாலை மேம்பாடு செய்தல் பணி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும், தீனட்டி முதல் பரடி வரை சாலை மேம்பாடு செய்தல் பணி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும், பனகுடிஹட்டி முதல் மன்றக்குறிச்சி வரை சாலை மேம்பாடு செய்தல் பணி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும் 2013-2014-ம் ஆண்டில் மேற்கொள்ள நிர்வாக அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ள இப்பணிகளால், சுமார் 200 முதல் 300 குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இச்சாலைப்பணிகள் நிறைவு பெறும் போது இதனால் சுமார் 2000 பொதுமக்கள் பயனடைவார்கள்' என இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.