மதுரையில் இந்த இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்கலாம் - ஆட்சியர்
மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வருகிற 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.
இதற்காக சிலை செய்யும் கலைஞர்கள் களிமண்ணால் ஆன சிலைகளை மும்முரமாக செய்து வருகிறார்கள்.
உருவாகும் சிலைகள்:
சிறிய சிலை முதல் பெரிய சிலைகள் வரை பக்தர்கள் மற்றும் தொழில் நிறவனங்கள் ஆர்டர் கொடுத்து வருகிறனர்.
ஆலோசனைக் கூட்டம்:
இந்த விநாயகர் சதுர்த்தி விழவைவை மதுரையில் அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கரைக்கும் இடங்கள்:
இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் தாலுகா வாரியாக விநாயகர் சிலைகள் கரைக்கும் நீர்நிலைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மதுரை இடங்கள்:
மதுரையில் வைகை வடகரை, கீழத்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவ்வந்தி குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய் ஆகிய நீர்நிலைகளில் கரைக்கலாம்.
மேலூர் இடங்கள்:
மேலூர் தாலுகாவில் மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி சிவன் கோவில் தெப்பம் ஆகிய இடங்களிலும், வாடிப்பட்டி தாலுகாவில் குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை தாமோதரன்பட்டி, தென்கரை அய்யனார் கோவில் ஊரணி, பெரியாறு கால்வாய் ஆகிய இடங்களில் கரைக்கலாம்.
உசிலம்பட்டி இடங்கள்:
உசிலம்பட்டி தாலுகாவில் நீர் அதிகம் உள்ள கிணறுகள், திருமங்கலம் தாலுகாவில் குண்டாறு மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல் சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல நதி ஆகிய இடங்களில் கரைக்கலாம்.
பேரையூரில் இடங்கள்:
பேரையூர் தாலுகாவில் மொட்டைகுளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி எழுமலை கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன் குறிச்சி கண்மாய் ஆகிய இடங்களிலும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை:
வேறு இடங்களில் கரைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.