ஆசிட் வீச்சு: மாணவர்கள் போராட்டம் - திருமங்கலம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை!
மதுரை: மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து திருமங்கலத்திலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா (17). பேரையூரில் 12ஆம் வகுப்பை படித்து முடித்தார் மீனா. உதயசூரியனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கவே உறவினர் பையனை திருமணம் செய்து வைக்க நினைத்தனர்.ஆனால் மீனா அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் உறுப்புக் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாண்டு சேர்ந்தார்.
கடும் நோயால் அவதிப்பட்டு வந்த உதயசூரியன் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு, இறந்து விட்டார். எனவே தாய் முருகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாளின் பராமரிப்பில் மீனாவும் அவரது தம்பி நிர்மல் குமாரும் இருந்து வருகின்றனர்.
மீனாவும் அதே ஊரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் மகள் அங்காள ஈஸ்வரியும் தோழிகள். இருவரும் திருமங்கலம் கல்லூரியில் படித்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் கல்லூரி முடிந்த உடன் மதிய உணவை முடித்து விட்டு மீனாவும், அங்காள ஈஸ்வரியும் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
பெருமாள் கோவில் அருகே மீனா நடந்து வந்த போது 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மீனா மீது ஆசிட் வீசினார். தடுக்க முயன்ற அங்காள ஈஸ்வரி மீது ஆசிட் படவே இரண்டு மாணவிகளும் அலறித் துடித்தனர்.
ஆசிட் வீசப்பட்டதில் மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல், ஆசிட் சிதறி தெறித்ததில் அங்காள ஈஸ்வரிக்கு தோள்பட்டை, கைகள் வெந்தன.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் போராட்டம்
இதையடுத்து, மாணவிகள் மீது ஆசிட் வீசியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு விடுமுறை
இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அந்த கல்லூரிக்கு கலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் அறிவித்துள்ளார்.
வாய் திறக்காத மாணவிகள்
ஆசிட் வீசிய நபர் யாரென்று அடையாளம் தெரியவில்லை என்று மாணவிகள் கூறி வருவதால் யாரை கைது செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
ஒருதலைக்காதலா?
மீனாவும், கோவையில் வேலை பார்த்து வரும் நபர் ஒருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே காதல் பிரச்சினையால் ஆசிட் வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையான சட்டங்கள்
காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா ஆகியோர் ஆசிட் வீச்சில் கொடூரமாக பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர். இதன் பின்னர், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. வர்மா கமிட்டியின் பரிந்துரையின் படி பெண்கள் மீது ஆசிட் வீசினால், 5 முதல் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை என அரசு அறிவித்தது. ஆனாலும் ஆசிட் வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.