காங்கிரஸ் வரவே வராது; பாஜக வந்தால் நல்லா இருக்காது: குழப்பிய டி.ராஜா
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியா இந்த அளவுக்கு பொருளாதார தேக்க நிலையில் உள்ளதற்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிதான் காரணம். அவர்களின் திறமையற்ற பொருளாதார கொள்கைகள்தான் நாட்டை பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டன.
இதனால் காங்கிரசை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அக்கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதி.
இந்த நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியை பிடிக்க பாஜக துடித்துக்கொண்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டின் நலனுக்கு சரியாக இருக்காது. தமிழ்நாட்டிலோ தேசிய அளவிலான தெளிவான பார்வை கொண்ட ஒரு கட்சியும் இல்லை. கொள்கை நெருக்கடியில் அவை சிக்கிக்கொண்டுள்ளன.
பாஜக குறித்தும் அதன் வகுப்புவாதம் குறித்தும் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுமே பேசுவதில்லை. தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஒருபடி மேலேயேபோய் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரசும் வரமுடியாது, பாஜக வந்தாலும் நன்றாக இருக்காது என்றார்.
சரி.. யார்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, இந்த சூழ்நிலையில் மாற்று கொள்கைகள் உடைய அரசை இடதுசாரிகளால் மட்டுமே அமைக்க முடியும். என்று டி.ராஜா தெரிவித்தார்.