காங்கிரஸ் டெபாசிட் இழக்க போவது உறுதி - தமிழருவி மணியன் பேச்சு
தூத்துக்குடி: காஙகிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி லோக் சபா தொகுதி மதிமுக வேட்பாளர் ஜோயாலை ஆதரித்து காந்திய மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் பொது கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு தமிழருவி மணியன் பேசியதாவது:
உலகின் பெரும் பாலான நாடுகளில் தமிழர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களிடம் வைகோவுக்கு தனி மரியாதை உண்டு. ஜெயலலிதா செய்த தவறை ஸ்டாலின் பட்டியலிட்டு காட்டுகிறார். இது மாநில தேர்தல் அல்ல. 2016 தேர்தலுக்கு சொல்ல வேண்டியவற்றை லோக் சபா தேர்தலுக்கு சொல்லுகிறார்.
தற்போது நடைபெறும் தேர்தலில் மோடியா, அல்லது ராகுலா என்ற கேள்விதான் எழ வேண்டும். காங்கிரஸ் இந்த தடவை படுதோல்வி அடைய போவது உறுதி. பிஜேபி கூட்டணிக்கு 280 இடங்கள் கிடைக்கும்.
தமிழகத்தில் 40 தொகுதியை வைத்து கொண்டு ஜெயலலிதா பிரதமராக முடியாது. 3வது அணி அமைக்க முடியாது. அப்படி அமைத்தால் யார் பிரதமராவது என்ற சண்டை தான் வரும். பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவது உள்பட பல அம்சங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கூட்டணி முறன்பாடா கூட்டணி என்று சிலர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் 24 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்து குடும்பங்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசு நமக்கு தேவையில்லை. எதிர்கால தமிழக நலனில் அக்கறையுள்ள இந்த அணியை ஆதரிக்க வேண்டும்.
காமராஜர் பெயரை சொல்லி சிலர் அரசியல் செய்கின்றனர். ஆனால் அவர் கொள்கை படி அரசியல் நடத்த வில்லை. பல்வேறு பிரச்சனைகளை நாடு எதிர்கொண்டுள்ளது. இதில் குறிப்பாக எல்லை ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. கட்டளையிட வேண்டிய இடம் மவுனமாக இருந்தால் எப்படி. அதற்கு வலிமையான மத்திய அரசு தேவை. இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.