உள்ளாட்சி இடைத் தேர்தல்... தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
சென்னை: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. ஆங்காங்கே அடிதடி, வேட்பாளர்கள் மீது தாக்குதல் என வன்முறையுடன் தேர்தல் களம் காணப்பட்டது.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 530 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தூத்துக்குடி மேயர் தேர்தலில் 53.89 சதவீத ஓட்டுகளும், கோவை மேயர் தேர்தலில் 44.59 சதவீத வாக்குகளும் பதிவானது. நகராட்சி தலைவர் தேர்தலில் விருத்தாசலத்தில் அதிகபட்சமாக 67.43 சதவீத வாக்குகளும், கடலூரில் 59.62 சதவீதமும், ராமநாதபுரத்தில் 54.57 சதவீதமும், அரக்கோணத்தில் 45 சதவீதமும் பதிவானது.
சென்னை மாநகராட்சியின் 35-வது வார்டில் 45 சதவீத வாக்குகள் பதிவானது. பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 73.34 சதவீதமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கான தேர்தலில் சராசரியாக 68 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.
வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுப்பெட்டிகளும் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் போது யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 35-வது வார்டுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்றார் அவர்.