முன்விரோதம்... விருத்தாசலத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்
கடலூர்: விருத்தாசலத்தில் நேற்று இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குத சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள தொட்டிக்குப்பம் பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில், வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் படுகாயமடைந்தனர். காயம்டைந்தவர்களுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் தொட்டிக்குப்பத்திற்கு அருகில் உள்ள கலரங்குப்பத்தில் வசிக்கும் ராமலிங்கத்தின் சகோதரர் வீட்டிலும், அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுவெடிகுண்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகள் மீது அடுத்தடுத்து வெடிகுண்டு வீசப்பட்டதால், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களை நடத்திய நபர்களை அவர்கள் தேடி வருகின்றனர்.