அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கில் நித்தியானந்தா ஆஜராக கோவை கோர்ட் உத்தரவு!
கோயம்புத்தூர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா நேரில் ஆஜராக கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி வேற்று மதத்தை சார்ந்தவர். தனது மனைவியை இந்து மதத்தை சேர்ந்தவராக தேர்ந்தெடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அவர் எப்படி இந்து மதத்தை காப்பாற்றுவார் என பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைர் அர்ஜூன் சம்பத் கோவை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதி ரேணுகா முன்பு விசாரணைக்கு வந்தது.
அர்ஜூன் சம்பத் தரப்பில் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதி ரேணுகா வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முகாந்திரம் இருப்பதால் நித்தியானந்தா வருகிற செப்டம்பர் 3-ந் தேதியன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
கடந்த திங்கள்கிழமைதான் சாமியார் நித்யானந்தாவை கைது செய்து ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என கர்நாடகாவின் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜாமீனில் வெளியே வரமுடியாத வழக்கில் கைது செய்ய போலீஸாருக்கு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.