குற்றாலத்தின் பெருமை சொல்லும் அருங்காட்சியகம்
குற்றாலம்: குற்றாலம் நகரில் அருவிகள்தான் பிரதானம் என்றாலும் அங்குள்ள அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது.
குற்றாலம் பண்பாட்டையும், இந்து மத வழிப்பாட்டையும் தன்னகத்தே தக்க வைத்து கொண்ட சிறப்பு வாய்ந்த பழமையான நகரமாகும்.
குற்றாலத்தின் பழமை 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், பழைய குற்றால அழுதகண்ணி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன.
இந்த ஆற்றங்கரையில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழங்கால மக்களின் தடையங்கள்
பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பழைய குற்றாலத்திலும், அதனை அடுத்து ஆயிரப்பேரி என்ற கிராமத்திலும் பெருங்கற்கால பண்பாட்டு தடையமாகிய முதுமக்கள் தாழிகளும், கருப்பு, சிவப்பு கலயங்கலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை பெருங்கற்கால மனிதர்கள் குற்றாலம் பகுதியில் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.
கல்வெட்டுக்களில் வரலாறு
திருக்குற்றாலநாதர் கோயிலில் காணப்படும் பாண்டியர், சோழர், நாயக்கர், தென்காசிப் பாண்டியர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் இவ்வூரில் தொடர்ச்சியான வரலாற்றை உறுதி செய்கின்றன.
அருட்காட்சியகம்
சிறப்பு வாய்ந்த குற்றால பேரூந்து நிலையத்திலிருந்து பேரருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சொக்கம்பட்டி சத்திரம் என்னும் கட்டிடத்தில் தொல்லியல் துறையின் அருட்காட்சியகம் செயல்பட்டுவருகிறது இவ்வருட்காட்சியகம் தமிழகத்தின் கலச்சாரப் பழமையையும், கலை சிற்ப பழமையையும் எழுத்து வடிவங்களின் பழமையையும் எடுத்து காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னர் கால கட்டிடம்
இந்த அருங்காட்சியகம் பழைய திருவாங்கூர் மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருவது தனிச்சிறப்பாகும். இங்கு சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளை சேர்ந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் பண்டைய கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
குற்றாலத்தின் சிறப்புக்கள்
இவ்வருங்காட்சியகத்தில் அமைந்துள்ள 9 காட்சி பெட்டிகளில் இவ்வூர் வரலாற்றோடு தொடர்புடைய தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.பி.8ம் நுற்றாண்டில் வணங்கப்பட்ட திருமால் சிலை, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கி.பி.10ம் நூற்றாண்டில் பிராம்மி சிலை,இப்படி ஏராளமான அரிய பொக்கிஷங்கள் இங்குள்ளன.
பழங்கால ஓலைச்சுவடிகள்
அகஸ்தியர் மருத்துவ பாடல்கள் அடங்கிய ஓலைசுவடிகள்,கி.பி.16ம் நூற்றாண்டில் உடன்கட்டை ஏறுதல் போன்ற நிகழ்வுகளும் இப்பகுதியில் நடந்தற்க்கான சான்றுகள்,என கி.மு, கி.பி, காலத்து ஓலைசுவடிகள், கல்வெட்டுக்கள், மரச்சிற்பங்கள், நிரம்பப்பெற்றுள்ளன.
பழங்குடியினர் பொருட்கள்
கொண்டை ஊசிகள், மரத்தாலான உரல், பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள், தேன் சேகரிக்கும் மூங்கில் குழல், பீரங்கி குண்டுகள், கி.பி.முதல் நூற்றாண்டு அனுமன், மதுரைவீரன் சிலை, பூஜை பொருட்கள், கி.பி.18ம் நூற்றாண்டு சீனப்பெண் தெய்வம், கி.பி.10ஆம் நூற்றாண்டு கால்சிலம்பு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இளையதலைமுறையினர் பார்வைக்கு
முதுமக்கள் தாழி, தாழியின் உட்சிறு கலையங்கள், மரச்சிற்பங்கள் மற்றும் அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் ஆஷ்துரை கல்வெட்டு ஆகியன உள்ளன.அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள பொருட்கள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கவலை
போதிய பராமரிப்பு இல்லை
இந்த அருங்காட்சியகம் இருக்கும் "சொக்கம்பட்டி சத்திரம்"மிகவும் பழமைவாய்ந்த காட்டிடமாக உள்ளது.அரிய பொக்கிஷங்கள் நிரம்பிக்கிடக்கும் அகழ்வைப்பகம் மழைக்கலங்காலங்களில் ஒழுகுவதால் போதிய அளவு இந்த கல்கட்டிடத்தை பராமரிக்க முடியாத நிலை உள்ளது.
இடம்மாற்ற கோரிக்கை
இந்த அருங்காட்சியகத்தில் போதிய இடவசதி இல்லாததாலும்,மிகவும் சிரமத்தோடு பொதுமக்கள் பார்வையிட்டு சென்றவண்ணம் உள்ளனர்.இந்த கட்டிடத்திலிருந்து வேறுக்கட்டிடத்திற்கு இந்த அகழ்வைப்பகத்தை மாற்றி பொக்கிஷங்கள் அனைத்தையும் பாதுக்காக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடப்புத்தகங்களில் இடம் பெறுமா?
இந்த பொக்கிஷங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் இதேபோன்று வரலாற்று பொருட்களை காண முடியுமா? முடியாது. எனவே பழங்கால பொக்கிஷங்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இவற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும் என்பதும் வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மெயினருவிக்கு குளிக்கச் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்லும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.