ரூ. 1க்கு இட்லி கொடுத்து விட்டு பால் விலையை உயர்த்தினால் எப்படி.. கேட்கிறார் தா.பாண்டியன்
சென்னை: மலிவு விலையில் அதாவது, ரூ.1க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம் என வழங்கும் அரசு, பால் விலை உயர்வை அறிவித்திருப்பது நியாயமற்றது. இந்த விலை உயர்வை அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை பாலன் இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மின் கட்டண உயர்வு
தமிழ்நாடு மாநில அரசும் மின்வாரியத்துறையும், மின் கட்டணத்தை மேலும் உயர்த்திட உத்தேசிப்பதாக வரும் செய்திகள், மக்களின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகச் சுமை நியாயமல்ல
மின் பற்றாக்குறையால் அடிக்கடி மின்சாரத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிற இன்னலுக்கு சிறு, குறுந்தொழில்களும் நடுத்தரத் தொழில்துறையும் குடும்பங்களும் மேலும் அதிகச் சுமையை ஏற்கவைப்பது நியாயமல்ல என்பதால் கட்டண உயர்வுத்திட்டத்தை கைவிடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நாசமடைந்த நெற் பயிர்கள்
தமிழ்நாட்டில் பெய்த தொடர்மழையால், காவிரி டெல்டா பகுதியிலும் வேறு சில மாவட்டங்களிலும் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட நெற்பயிர்கள் அழுகி நாசமாகியிருப்பதால் தேங்கிய தண்ணீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுவதுடன், மறுபயிர் செய்திட உதவும் வகையில் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகட்கு வழங்கிடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்
தொடர்மழையின் விளைவாக இடிந்து வீழ்ந்துவிட்ட குடியிருப்புக்களுக்கும், மழைகாரணமாக உயிர்களை இழந்தோர்க்கும் தக்க நிவாரண நிதியை தமிழக அரசு வழங்கிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.
பால் விலை உயர்வு
தமிழ் நாடு அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை நிறுவனம், விற்கப்படும் பாலுக்கு ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கலப்பட மோசடியை சரிக்கட்ட
கடந்த மாதம் ஆவின் பாலில் தண்ணீர் கலந்து கள்ளத்தனமாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்த ஊழல் விவரம் வெளிவந்தது ஆவின் பால் நிறுவனத்தில் உள்ள பல குறைகளில் ஒன்று மட்டுமே பிடிபட்ட நிலையில் நிர்வாக சீர்திருத்தம் மூலம் நியாய விலையில் மக்களுக்கு பால் கிடைக்கச் செய்வதற்கு பதிலாக லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தி இருப்பது தவறான நடவடிக்கை ஆகும்.
இட்லி, சாம்பார் சாதம் தரும் நிலையில்
தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார்சாதம் என வழங்கி வருகிற அதே காலத்தில், அதே அரசு பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் வீதம் உயர்த்தியிருப்பதை உடனே கைவிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.
மோடியின் இந்தித் திணிப்பு
நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பன்மைத்துவத்தை அழித்து, ஒரு மதம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற இந்துத்துவ கொள்கையை அமலாக்கம் செய்வதற்கு பெரும்முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்திய மொழிகளை அழிக்கும் செயல்
ஊடகங்கள் கல்வி ஆகியவற்றில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணித்து இந்திய மாநில மொழிகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கடுமையாக கண்டிக்கிறோம்
இந்த சூழ்நிலையில் வானொலி ஒளிப்பரப்பிலும் மாநில மொழிகளை தவிர்த்து, இந்தியில் ஒளிபரப்ப வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.