செல்வகணபதி விஷயத்தில் திமுக, அதிமுக இரண்டுமே வாய் திறக்கவில்லையே.. சிபிஎம் கேள்வி
திண்டுக்கல்: சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி குறித்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வாய் திறக்காமல் இருக்கின்றனவே, ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அவர் பேசுகையில், சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில் நடைபெற்ற ஊழலில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
இது திருடனுக்கு தேள் கொட்டியது என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது. அதைத்தான் திமுக, அதிமுகவின் மெளனம் காட்டுகிறது.
அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசின் சாதனை மெகா ஊழல் மட்டும் தான் என்றார் அவர்.