27ம் தேதி முதல்வராக ஜெ. நீதிமன்ற படியேறுவாரா?, ராஜினாமாவா?: சதுரங்க சட்ட ஆலோசனை!
சென்னை: எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று இருக்கும். 1 ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் ஜெயலலிதா, 66 கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்தது சரியா தவறா என்ற கேள்விக்கான விடை செப்டம்பர் 27ம் தேதி தெரிந்து விடும்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா செப்டம்பர் 20ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் இறுதியில் அறிவித்தார். ஆனால் நீதிமன்ற இடமாற்றம், பாதுகாப்பு காரணங்களினால் தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதி ஒருவாரம் தள்ளிப் போயிருக்கிறது.
''அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்'' என்பது நீதிபதியின் உத்தரவு. எனவே முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் செல்ல முடிவெடுத்துவிட்டார். அதற்காகத்தான் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றத்தையே இடமாற்றம் செய்யச் சொல்லி கேட்டுள்ளார்.
27ம் தேதி காலையில் சிறப்பு விமானம் மூலமாக பெங்களூர் செல்லும் அவர், நேரடியாக நீதிமன்றம் செல்வாரா அல்லது ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று தங்கிவிட்டுச் செல்வாரா என்று இன்னமும் திட்டமிடவில்லையாம். தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே போயஸ்கார்டனில் தீவிரமான சட்டரீதியான ஆலோசனைகள் தினமும் நடந்து வருகின்றன.
தயார் மனநிலையில்...
சொத்துக் குவிப்பு வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ள முதல்வர் தயாராகிவிட்டார் என்றே சொல்கிறார்கள். எனவேதான் பெங்களூர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
தள்ளுபடி, வாபஸ்
தீர்ப்பினை அறிவிக்க தடை வாங்கலாம், குறைந்த பட்சம் தீர்ப்பினை ஒத்திப் போட வைக்கலாம் என்று மனு மேல் மனு போட்டு அவை தள்ளுபடியானதுதான் மிச்சம். அதேபோல கூட்டுச் சதி என்ற வார்த்தையை நீக்க வலியுறுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் போடப்பட்ட மனுவையும் வாபஸ் பெற்றுவிட்டனர்.
தீர்ப்பு தேதியை மாற்றிய மனு
பெங்களூர் செல்வது உறுதி என முடிவான உடனேயே கடந்த 15ம் தேதி ஜெயலலிதா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் 96 நீதிமன்றங்கள் இருக்கிறது. பல்லாயிரம் பேர் வருகிறார்கள், போகிறார்கள். இங்கு அவருக்குப் பாதுகாப்பாக இருக்காது. அதனால் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 2011-ல் தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூர் வந்தபோது பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனில்தான் நீதிமன்றம் நடைபெற்றது. அதேபோல பாதுகாப்பு கருதி இந்த முறையும் அங்கே நீதிமன்றத்தை மாற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்' என்று மனுவைக் கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குன்ஹா, பரப்பன அக்ரஹார வளாகத்திற்கு நீதிமன்றத்தை மாற்றி உத்தரவிட்டார். அதோடு தீர்ப்பு வழங்கும் தேதியையும் 27ஆம் தேதியாக மாற்றினார்.
தீர்ப்பு நாளில் எப்படி
இப்போதைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் முன் நிற்கும் முக்கிய கேள்விகள் இரண்டு உள்ளது. தீர்ப்பு நாளன்று முதல்வர் அந்தஸ்துடன் கோர்ட்டுக்கு போவதா?' அல்லது முன்னதாகவே ராஜினாமா செய்து விட்டு போவதா என்பதுதான் அவை.
பதவி கவலை இல்லை
முதல்வராக இருந்துகொண்டு நீதிமன்ற படி ஏறினார் என்று வரக்கூடாது. அதனையும் தவிர்த்துவிடலாம். பதவியைப்பற்றி கவலை இல்லை என்றும் இதன் மூலம் அறிவிக்கலாம். நீதிமன்றம் நிரபராதி என்று விடுதலை செய்யும்பட்சத்தில், மீண்டும் பெரும் வெற்றி விழாவோடு பதவியேற்கலாம் என்பது ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் கருத்து.
ராஜினாமா செய்தால்
அதே சமயம் அப்படி முன்கூட்டியே ராஜினாமா செய்தால், நாமே தண்டனை வரும் என்பதை உணர்ந்ததுபோல ஆகிவிடும். அதனால், ராஜினாமா செய்யத் தேவையில்லை. சூழ்நிலையைப் பொறுத்து அன்று முடிவு செய்யலாம் என்று இன்னொரு தரப்பு வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தண்டனை கிடைத்தால் பதவி பறிப்பு
'மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (1), (2) மற்றும் (3) ஆகியவற்றின்படி மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும்பட்சத்தில், அவர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும். அது எந்த வகையான தண்டனை, எத்தனனை ஆண்டு தண்டனை என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்தப் பதவிப் பறிப்பைக் கட்டுப்படுத்தாது.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் முன்பு தேர்தலில் போட்டியிட தடை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு மிக மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்துக்கு ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ, தண்டிக்கப்பட்டால் அவரது பதவி உடனடியாக பறிபோகும்.
இடியாப்ப சிக்கல்
இரண்டு ஆண்டு வரையறை என்பது மற்ற குற்றங்களுக்கு மட்டும்தான். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வழங்கும் தண்டனையாக இருந்தால், அது என்ன தண்டனையாக இருந்தாலும் சிக்கல்தான். நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு சிறைத் தண்டனை வழங்கும் பட்சத்தில், அது ஒரு வருட தண்டனையா அல்லது ஒரு நாள் தண்டனையா என்பதும் கருத்தில் கொள்ளப்படாது. அவர் தண்டனை பெற்றாரா, இல்லையா என்பது மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்
தண்டனை பெற்றவர் என்றால், உடனடியாக அவருடைய பதவி பறிக்கப்படும். உதாரணமாக எம்.பி.பி.எஸ் இட ஒதுக்கீடு மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி ரஷீத் மசூத் பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. அதேபோல கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது.
மேல்முறையீடு செய்தாலும்
அதுபோல தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி ஒருவர், தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து, சிறை செல்வதற்குத் தடை வாங்கலாம். ஆனாலும் கைது நடவடிக்கைக்கு எதிராக வாங்கும் தடை என்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் பதவி பறிக்கப்படுவதை எந்த வகையிலும் பாதிக்காது.
ஜாமீன் கிடைத்தாலும் பதவி கிடைக்காது
அதுபோல தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி ஜாமீனில் விடுதலையானாலும், அந்த விடுதலையைக் காட்டி தன்னுடைய பதவியைத் திருப்பிக் கேட்க முடியாது. ஏனென்றால், ஜாமீன் விடுதலை என்பது குற்றவாளிக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணம்தானே தவிர, அது அவர் குற்றமற்றவர் என்று சொல்லி வழங்கப்படும் விடுதலை அல்ல. இதனால் வழக்கில் இருந்து மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால் ஒழிய, ஜாமீனில் வெளியே வந்துவிட்டு மீண்டும் எம்.பி, எம்எல்ஏ, முதல்வர் பதவிகளில் அமர முடியாது.
அபாரதம் விதித்தாலும்
அதே போல சிறை தண்டனை அல்லாமல், குறைந்தபட்சம் அபராதம் மட்டுமே அவர்களுக்குத் தண்டனையாக விதிக்கப்பட்டாலும்கூட, உடனடியாக அவர்கள் பதவி பறிக்கப்பட வேண்டும். ஒருவேளை குற்றவாளி மேல்முறையீட்டுக்குச் சென்றாலும், அந்த மேல்முறையீட்டு வழக்கில் அவர் விடுதலையாகும் வரை அவர் பதவி வகிக்க முடியாது.
உஷார் நிலையில் போலீஸ்
இந் நிலையில் பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் நாளன்று எந்த அசம்பாவிதமும் பழைய மாதிரி நடந்துவிடக் கூடாது என்பதிலும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் தீவிரமாக உள்ளனர். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2001 ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு தீர்ப்பு வெளியானபோது தர்மபுரியில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்தை அதிமுகவினர் எரித்து, 3 மாணவிகளை உயிரோடு கொளுத்தியது நினைவுகூறத்தக்கது.