சொத்துக் குவிப்பு வழக்கு: சுதாகரன், இளவரசி சார்பில் புதிய வழக்கறிஞர் ஆஜர்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வாதாடுவதற்காக மும்பையைச் சேர்ந்த புதிய வழக்கறிஞர் அமித் தேசாய் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
சசிகலா தரப்பு இறுதி வாதம் முடிவடையாததால், புதன்கிழமை இறுதிவாதத்தை தொடங்க தேசாய்க்கு நீதிபதி அனுமதியளித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் தேசாய் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் புதியதாக மனு ஒன்றை தாக்கல் செய்து பேசும்போது,
"இவ்வழக்கில் 3, 4-வது குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுதாகரன், இளவரசி சார்பில் இனி நான் வாதாட இருக்கிறேன். மும்பை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடைபெற்று வரும் பல வழக்குகளில் நான் ஆஜராகி வருகிறேன். ஆதலால் எனக்கு அடுத்த இரு வாரங்களுக்கு கடுமையான பணிகள் இருக்கிறது. எனவே சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் எனது இறுதிவாதத்தை புதன்கிழமை தொடங்க அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
புதன்கிழமை இறுதி வாதம்
வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா தரப்பின் இறுதி வாதம் இன்னும் முடிவடையவில்லை. அவருடைய வழக்கறிஞர் மணிசங்கர் ஒப்புதல் அளித்தால், நீங்கள் வாதத்தை தொடங்கலாம் என நீதிபதி தெரிவித்தார். அதற்கு மணிசங்கர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, புதன்கிழமை தனது இறுதிவாதத்தை தொடங்க நீதிபதி அனுமதி அளித்தார்.
மதிப்பீட்டில் குளறுபடி
இதனைத் தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர், 3-வது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதாடும்போது, "சசிகலா வுக்கு தொடர்புடைய பல்வேறு தனியார் நிறுவனங்களை விசாரணை அதிகாரிகள் வழக்கில் இணைத்தனர். ஆதலால் அந்த நிறுவனங்கள் மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்த கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் ஆகிய வற்றை தமிழக அரசின் பொறியியலாளர்கள் மதிப்பீடு செய்தனர்.
காலதாமதமாக மதிப்பீடு
அந்த வகையில் நீலங்கரை பங்களா, தி.நகர் வணிககட்டிடம், கொடநாடு பங்களா, பையனூர் பங்களா மற்றும் சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை பார்வையிட்ட அதிகாரிகள், ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு மதிப்பீட்டை தாக்கல் செய்துள்ளனர் என்பதை நில மதிப்பீட்டு அதிகாரிகளே குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
கட்டிடங்களின் மதிப்பு
காலதாமதமாக மதிப்பீட்டை தாக்கல் செய்வதை நிலமதிப்பீட் டாளர்களும், விசாரணை அதிகாரிகளும் திட்டமிட்டே செய்துள்ளனர். இதன்மூலம் மிகக் குறைவான மதிப்புள்ள கட்டிடத்தின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுபோல தான் வழக்கில் கூறப்படும் அனைத்து கட்டிடங்களின் மதிப்பும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
சுதாகரன் தரப்பு இறுதி வாதம்
இதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா பேசும்போது, "செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை என்பதால், புதன்கிழமை சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமித் தேசாய் தனது இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தீர்ப்பு எப்போது?
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்துள்ளது. தற்போது சசிகலா தரப்பு இறுதிவாதம் நிறைவடையும் நிலையில் உள்ளது. புதன்கிழமை சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதம் தொடங்க உள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் மாத இறுதிக்கும் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.