சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற ஜெ. மனு
சென்னை: விடுதலைப் புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால், சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த வழக்கில் வரும் 20ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இதனால், 20ம் தேதி ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மனுதாக்கல்
இந்நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் செந்தில் மற்றும் பன்னீர் ஆகியோர் இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், விடுதலைப் புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், தீர்ப்பு அளிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை பரப்பனஅக்ராஹாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை விசாரணை
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று கூறினார். தீர்ப்பு நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புக்காக இடமாற்றம்
கடந்த 2011ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதுகாப்புக்காக தனி நீதிமன்றம் பெங்களூர் புறநகரில் பரப்பன அக்ரகாரத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
கேள்விகளுக்கு பதில்
இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரகாரம் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். எனவேதான் தீர்ப்பு நாளின் போது ஜெயலலிதா ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தை மாற்றவேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறப்பு நீதிமன்றம் நகரின் மைய பகுதியிலுள்ள சிட்டி சிவில் கோர்ட் வளாகத்திலும், பரப்பன அக்ரஹாரம் பகுதி, பெங்களூர்-ஒசூருக்கு நடுவே பெங்களூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள புறநகர் பகுதியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.