தலித் சிறுமியை பள்ளியில் சேர்க்க தாயாரை வேலை வாங்கினாரா தலைமை ஆசிரியை?
மதுரை: தனது மகளைப் பள்ளியில் சேர்க்க வந்த ஒரு தலித் பெண்ணை தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தார் என்று ஒரு தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது.
ஆனால் தனக்கு வேலை தருமாறு சம்பந்தப்பட்ட பெண் முத்துப் பிள்ளை கேட்டதால்தான் தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சொல்லிச் சொன்னோம். இதற்காக அவருக்கு ரூ. 250 கூலியும் தரப்பட்டதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி விளக்கியுள்ளார்.
ஆனால் தனது தாயாரை கட்டாயப்படுத்தி இதைச் செய்ய வைத்ததாக சம்பந்தப்பட்ட பெண்ணா முத்துப்பிள்ளையின் மகள் கூறியுள்ளார்.
மகளைச் சேர்க்க வந்த முத்துப்பிள்ளை
முத்துப்பிள்ளையின் மகள் பத்தாவது வகுப்பை மேலூர் அல் அமீன் பள்ளியில் படித்தார். அங்கு அவர் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேறினார். பிளஸ் ஒன் படிப்புக்காக அரசு மேல் நிலைப்பள்ளிக்கு வந்துள்ளார்.
மாலை 4 மணிக்கு
சம்பவத்தன்று அதாவது ஜூலை 28ம் தேதி பள்ளியில் குரூப் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடந்தது. அப்போது தலைமை ஆசிரியை மைதானத்தில் இருந்துள்ளார். தண்ணீர்த் தொட்டியைப் பார்த்த அவர் அது அசுத்தமாக இருந்ததை அறிந்து உடனடியாக முத்துப்பிள்ளையை அழைக்குமாறு ஒரு ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
போன் போட்டு வரவழைப்பு
அட்மிஷனுக்காக வந்து சென்றிருந்த முத்துப்பிள்ளையை அவரது செல்போனில் அழைத்த ஆசிரியை, உடனடியாக வருமாறு கூறியுள்ளார்.
2 மணி நேரம்
முத்துப்பிள்ளையும் வந்துள்ளார். அவரிடம் தொட்டியைச் சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியை பணித்துள்ளார். முத்துப்பிள்ளையும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்துள்ளார்.
பள்ளிக்கூடத்தில் கோஷ்டி பூசல்....
இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயசாமி கூறுகையில், நான் இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் பேசினேன். அந்தப் பெண் தான் தனது மகளை பள்ளியில் சேர்க்க வந்தபோது வேலை இருந்தால் கொடுங்கள் என்று கேட்டதாகவும் இதனால்தான் வேலை செய்யச் சொன்னேன் என்றும் விளக்கினார். இதுபோல இனிமேல் செய்ய வேண்டாம் என்று அவருக்கு நான் அறிவுரை கூறியுள்ளேன். மேலும் அந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. அதுதொடர்பாகவும் நான் விசாரித்து வருகிறேன் என்றார்.