நெல்லை, தூத்துக்குடியில் ஜோராக பெய்த மழை.. அணைகள் நிரம்புகின்றன!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலையில் தென் மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பரில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.
ஆனால் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட தேதியில் தொடங்கினாலும் குறிப்பிட்டு சொல்லும்படி பெய்யவில்லை. இதனால் ஜூன் 1ம் தேதி கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறக்கப்படவி்ல்லை.
தாமதமாக திறக்கப்பட்ட பாபநாசம் அணை
பின்னர் தாமதமாக பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில் பருவ மழை காலம் முடியும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மலை பகுதியில் ஓரளவுக்கு மழை பெய்தது.
உயர்ந்து வரும் நீர்மட்டம்
இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 74.10 அடியாக உள்ளது. தற்போது 1 நாளில் 4 அடி உயர்ந்து 78.10 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சேர்வலாறு அணை
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 நாளில் 7 அடி உயர்ந்து 91.53 அடியாக உள்ளது. அணை பகுதியில் 18 மிமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது.
ஒரே நாளில் 3 அடி உயர்ந்த அடவிநயினார்
அடவி நயினார் அணையின் நீர்மடடம் ஓரே நாளில் 3 அடி உயர்ந்து 93.50 அடியானது. கருப்பாநதி அணையில் 16.5, குண்டாறில் 32 மிமீ, கொடுமுடியாறு அணையில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை
நேற்று ஒரு நாள் மட்டும் காலை முதல் இரவு வரை மழை விட்டு விட்டு வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் திக்கு்முக்காடி போயினர்.