தீபாவளி: சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகள் இல்லாமல் அவதி... பயணிகள் மறியல்
சென்னை: தீபாவளிப் பண்டிகைக்காக முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வராத காரணத்தால் விடிய விடிய காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வரத் தொடங்கினர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், பேருந்துகள் போதுமான அளவிற்கு இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். முன்பதிவு செய்தவர்கள், குறித்த நேரத்தில் பேருந்தில் பயணிக்காமல் சுமார் நான்கு மணி நேரம் தாமதத்திற்கு பிறகே பயணம் செய்ய முடிந்தது.
இந்நிலையில், பேருந்து கிடைக்காததால் அதிருப்தியடைந்த பயணிகள், கோயம்பேட்டில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இவைத் தவிர சென்னையில் நேற்றிரவு ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கோயம்பேடு, மதுரவாயல், வடபழனி, நெற்குன்றம் உள்ளிட்டப் பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், கேயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த நெரிசல் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால், கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட பேருந்துகள் சென்னை நகரை கடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
முன்பதிவு செய்யாதவர்கள் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காததால் பெரும் அவதிக்கு ஆளாயினர். இதனால், பலர் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சந்தோசமாக சொந்த ஊர் செல்லவேண்டிய மக்கள் சிரமத்துடனே புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.