அவதூறு வழக்கு: அரியலூர் கோர்ட்டில் காடுவெட்டி குரு ஆஜர்
அரியலூர்: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வன்னியர் சங்க தலைவர் குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் அப்போது குருவிற்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
அரியலூரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழக முதல்வரை அவதூறாகவும், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசியதாக அரியலூர் அரசு வழக்கறிஞர் சண்முகம் அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான காடுவெட்டி குருவிடம் விசாரணை செய்த மாவட்ட நீதிபதி கிருஷ்ணவள்ளி, வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை குருவிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, காடுவெட்டி குருவுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
காடுவெட்டி குரு நீதிமன்றத்தில் ஆஜரானதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.