மீன்பிடி தடைக்காலம்: வஞ்சிரம் வாங்க முடியலை... நெத்திலி நினைக்க முடியலை...
சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் சந்தைகளில் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 14ம் நள்ளிரவு முதல் தொடங்கியது. மீன்களின் இன விருத்திக்காக 45 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாது.
சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வெளிமாநில மீன்கள்
தமிழ்நாட்டின் மீன் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திரா, கேரளா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வருகிறது.
மீன்சந்தைகளில் வரத்து குறைவு
வானகரம், சிந்தாதிரிப் பேட்டை, சைதாப்பேட்டை, ஜாம்பஜார், புரசைவாக்கம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படும் மீன்கள் நகரின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
விலை அதிகம்
உள்ளூர் மீன்வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் மற்ற நாட்களை விட இப்போது மீன் கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை அதிகம் வைத்து விற்கப்படுகிறது.
வஞ்சிரம் வாங்க முடியலை...
மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தாலும் வெளி மாநில மீன்கள் நிறைய வருவதால் எல்லா மீன்களும் சென்னையில் வழக்கம் போல் கிடைக்கிறது.
வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 700க்கும், சங்கரா மீன் சிறியது கிலோ ரூ. 160க்கும் பெரிய சங்கரா ரூ. 250க்கும் விற்பனையாகிறது.
இறால் விலை உயர்வு
ஷீலா மீன் கிலோ ரூ. 150 முதல் 340 வரையிலும், சால மீன் கிலோ ரூ. 100க்கும் விற்பனையாகிறது. இறால் கிலோ ரூ. 500க்கு விற்பனையாகிறது.
கெண்டை, கெழுத்தி...
கெண்டை மீன் கிலோ ரூ. 150, கொடுவா மீன் கிலோ ரூ. 300, கெளங்கா மீன் கிலோ ரூ.200, விரால் மீன் கிலோ ரு.350, சுறா ரூ.250, மத்தி மீன் கிலோ ரு.60க்கும் விற்பனையாகிறது.
நண்டு நகரலையே
நண்டு சிறியது கிலோ ரூ.200க்கும், பெரிய நண்டு கிலோ ரூ.300க்கும் விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
கருவாடு காணலையே
மீன்களைப் போல கருவாடு விலையும் உயர்ந்துள்ளது. சாதா நெத்திலி கருவாடு கிலோ ரூ.180, பால் நெத்திலி கருவாடு ரகம் வாரியாக ரூ.180, ரூ.220, ரூ.240&க்கும், சூளை கருவாடு ரூ.100, சாளை ரூ.60 முதல் ரூ.70 வரையும், வார்சூளை ரூ.100, சீலா நெய் கருவாடு ரூ.600, மஞ்சள் பாறை கருவாடு ரூ.700, கொலுசாலை ரூ.50, கொலுவை ரூ.50, சுறா ரூ.50க்கும் கருவாட்டு பேட்டையில் விற்கப்படுகிறது.
மந்த நிலையில் விற்பனை
வசதி படைத்த ஒரு சிலர் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றாலும், பெரும்பாலான மக்கள் கருவாட்டை தவிர்த்து விடுவதால், கருவாடு விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மீன்பிடி தடைக்காலம் நீங்கியதும் கருவாடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.