சதுரகிரி மலையில் இறங்க முடியாமல் தவித்த ஒரு லட்சம் பக்தர்கள்!
விருதுநகர்: சதுரகிரி மலையில் சனிக்கிழமையன்று ஆடி அமாவாசை விழாவிற்கு எதிர்பாராத விதமாக 3 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் குவிந்தனர். ஞாயிறன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மலைக்கு சென்ற பக்தர்களில் ஒரு லட்சம் பேர் கீழே இறங்க முடியாமல் 5 மணி நேரம் தவித்தனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் சுமார் 4,500 அடி உயரத்தில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, தென்கயிலை என்னும் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
சித்தர்கள் மலை
இது, பஞ்சபூத லிங்கத் தலமாகும். இதில், சுந்தரமகாலிங்கம் சற்று இடதுபுறம் சாய்ந்து காணப்படும் சுயம்பு லிங்கமாகும். இத்தலம், 18 சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால், சித்தர்கள் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. சதுரகிரி மலையில் ஏராளமான மூலிகைகளும், தீர்த்தங்களும், அருவிகளும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆடி அமாவாசை
இந்த ஆண்டும், ஆடி அமாவாசையை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமைகளில், தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழியாகவும், மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு வழியாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
சர்வ அலங்காரத்தில்
சனிக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில், சுவாமிக்கு பால், பழம், தண்ணீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், பச்சரிசி மாவு, மஞ்சள் பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர், சுவாமி வெள்ளிக் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை அதிகாலை முதல் சுமார் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
மலை முழுவதும் பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனால், சதுரகிரி மலை முழுவதும் மக்கள் கூட்டமே தென்பட்டது.
பக்தர்கள் தவிப்பு
ஒரு பக்கம் ஆடி அமாவாசை விழாவுக்கு சென்ற பக்தர்கள் விடிய விடிய வழிபாடு முடிந்து ஞாயிறன்று கீழே இறங்க முயற்சிக்க, இன்னொரு பக்கம் சதுரகிரி மலைக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறையில் இருந்து மலை வழியாக ஏற முயற்சித்தனர். இதனால் மலைப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மயங்கிய பக்தர்கள்
பல பெண்கள், சிறுவர்கள் மயங்கி விழுந்தனர். சதுரகிரி மலைக்கு சென்ற ஒரு லட்சம் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் 5 மணி நேரம் தவித்தனர். இதையடுத்து மலை அடிவாரத்தில் இருந்து மேலே பக்தர்கள் செல்ல காவல்துறையினர் 3 மணி நேரம் தடை விதித்தனர். இதனால் மலையில் இருந்து பக்தர்கள் கீழே வருவது எளிதானது.
கூட்ட நெரிசல்
இதையடுத்து மலையில் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக அணி வகுத்து இறங்கினர். அதுபோல் மலைக்கு மேலே செல்ல குறைந்த அளவிலான பக்தர்களை காவல்துறையினர் அனுமதித்தனர். இதனால் சதுரகிரி மலையில் கூட்ட நெரிசல் கணிசமாக குறைந்தது.