லோக்சபா தேர்தல்: புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு தேமுதிக திடீர் ஆதரவு!
சென்னை: லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனை ஆதரிப்பதாக தேமுதிக திடீரென அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பாமக இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஆனால் புதுச்சேரி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ம.க. வும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இதனால் அம்மாநில பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் உருவானது.
ஒருகட்டத்தில் பா.ம.க. வேட்பாளரையே ஆதரிப்போம் என மதிமுக அறிவித்தது. அப்போது தேமுதிக, எங்கள் கட்சி, கொடி, தலைவர் பெயரை எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தது. இதனால் பாரதிய ஜனதாவும் நடுநிலை வகிக்கலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனுக்கு ஆதரவு தெரிவித்து அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
நடைபெறவுள்ள 16வது பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது. எனவே புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்து மாபெரும் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை விஜயகாந்த் நேரில் சந்திக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.