13 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் மோதும் தேமுதிக!!
சென்னை: லோக்சபா தேர்தலில் திருவள்ளூரைத் தவிர்த்து 13 தொகுதிகளில் அதிமுக- திமுகவுடன் தேமுதிக நேரடியாக மோதுகின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இந்த அணியில் 14 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
தேமுதிக தாம் பெற்றுள்ள 14 தொகுதிகளில் திருவள்ளூரைத் தவிர 13-ல் பிரதான திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது.
மத்திய சென்னை
மத்திய சென்னையில் அதிமுக சார்பில் மாணவர் அணி செயலர் விஜயகுமார், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் தேமுதிகவும் களமிறங்குகிறது.
வடசென்னை
வடசென்னையில் அதிமுக வேட்பாளராக டி.ஜி. வெங்கடேஷ் பாபுவும் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் கிரிதரனும் களமிறங்குகின்றனர். இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் உ. வாசுகியும் போட்டியிடுகிறார். தேமுதிகவின் சார்பில் தொழிற்சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் போட்டியிடுவதால் டப் ஃபைட் இங்கு இருக்கும்.
விழுப்புரம்
விழுப்புரம் தொகுதியில் எஸ். ராஜேந்திரனை அதிமுக வேட்பாளராக களமிறக்கியுள்ளது. திமுக சார்பில் முத்தையனும் களத்தில் இருக்கின்றனர். தேமுதிக கணிசமான வாக்குகளைக் கொண்ட தொகுதி என்பதால் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ள தொகுதி இது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் டாக்டர் காமராஜூம் திமுக சார்பில் மணிமாறனும் களமிறங்கியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட இத்தொகுதியை சண்டைபோட்டு வாங்கி இருக்கிறது தேமுதிக. பாமகவும் தேமுதிகவும் வலுவானதாக இருக்கும் இத்தொகுதியில் இரு கட்சிகளும் ஒன்றாக தேர்தல் பணிந்தால் வெற்றி நிச்சயம்.
சேலம்
சேலத்தில் அதிமுக வேட்பாளராக பன்னீர்செல்வமும் திமுக வேட்பாளராக உமாராணியும் போட்டியிடுகின்றனர். சேலத்தில் பாமகவின் அருள் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும் போராட்டம் நடத்தி தேமுதிக வாங்கியுள்ளது. இங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் அருள் சுயேட்சையாக போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுவதால் பரபரப்பான தொகுதி பட்டியலில் இணைந்து கொண்டது சேலம்.
நாமக்கல்
இத்தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரத்தை அதிமுக வேட்பாளராக களமிறக்க திமுகவோ சிட்டிங் எம்.பி. காந்தி செல்வனை களமிறக்கியுள்ளது. தேமுதிகவுக்கு இங்கு மகேஸ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய வந்த நாளில் போட்டியிட முடியாது என்று எஸ்கேப்பாகிவிட்டார். முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.
கரூர்
கரூரில் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமியை திமுக வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதிமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தம்பித்துரை மீண்டும் போட்டியிடுகிறார். வலுவான இரண்டு தலைகளுக்கு இடையே தேமுதிகவும் தலையைக் கொடுக்கிறது.
திண்டுக்கல்
இத்தொகுதியில் அதிமுகவின் உதயகுமார், திமுகவின் காந்திராஜன் மோதுகின்றனர். தேமுதிக இத்தொகுதியில் கணிசமான வாக்குகளைக் கொண்டிருக்கிறது.
திருச்சி
திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் சிட்டிங் எம்.பி. குமார், திமுக சார்பில் முன்னாள் துணை மேயர் அன்பழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேமுதிக சார்பில் ஏ.எம்.ஜி.விஜயகுமார் இறக்கப்பட்டுள்ளார்.
கடலூர்
இத்தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவனை களமிறக்க திமுகவோ நந்தகோபாலை இறக்கிவிட்டுள்ளது. தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக சொல்லப்படும் இத்தொகுதியும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருக்கிறது.
மதுரை
மதுரையில் துணை மேயர் கோபாலகிருஷ்ணனை அதிமுக வேட்பாளராக நிறுத்த, திமுகவோ வேலுச்சாமியை களமிறக்கியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொந்த தொகுதி என்பதாலும் மு.க. அழகிரி உள்ளடி வேலை செய்யக் கூடிய தொகுதி என்பதாலும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக இருக்கிறது. தேமுதிக சார்பில் சிவமுத்துகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி
இங்கு திமுக வேட்பாளராக தேவதா சுந்தரமும் அதிமுக வேட்பாளராக பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் தேமுதிக மல்லுக்கட்டுகிறது.
திருப்பூர்
தேமுதிக போராடிப் பெற்ற தொகுதிகளில் ஒன்று திருப்பூர். இங்கு அதிமுக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் செந்தில்நாதனும் போட்டியிடுகின்றனர். போராடி வாங்கிய திருப்பூர் தொகுதியை தேமுதிக தக்க வைக்குமா? என்பதுதான் முதன்மை கேள்வி.