நீலகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்
நீலகிரி: நீலகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சாந்தி ராமு அதிமுகவில் இணைந்துள்ளார்.
நீலகிரி மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்தவர் சாந்தி ராமு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டச் செயலாளராக இவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்தார்.
எதிர்க்கட்சிகளில் மன உளைச்சலில் உள்ள நிர்வாகிகளை எல்லாம் கண்டறிந்து அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என அதிமுக முக்கிய நிர்வாகிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கடந்த மாதம் நீலகிரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்த விஜயகாந்த் மாவட்டச் செயலாளர் சாந்தி ராமுவுடன் முகம் கொடுத்து பேசவில்லை என்று கூறப்படுகின்றது.
மேலும், ஹோட்டல் அறையில் தங்கியிருந்த விஜயகாந்தை சந்திக்க காத்திருந்த சாந்தி ராமுவை சந்திக்காமலேயே, பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த சாந்தி ராமு விரக்தியுடன் இருந்தார்.
இந்த நிலையில் கொடநாடு முக்கிய பிரமுகர் மூலம் போயஸ் கார்டனுக்குச் சென்று அதிமுகவில் சேர்ந்துவிட்டார். தேர்தலுக்குப் பின்பு சாந்தி ராமு வசிக்கும் கோத்தகிரி பகுதியில் அவருக்கு கட்சிப் பதவி வழங்கப்படும் என்ற உறுதிமொழி அதிமுக தலைமை வழங்கியுள்ளதாம்.
நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளரே அதிமுகவுக்கு தாவி இருப்பது தேமுதிக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.