ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு தேமுதிக எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம்!
சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநில வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவினால் நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தும், லட்சக் கணக்கானோர் இடம் பெயர்ந்தும் உள்ளதை செய்திகளின் வாயிலாக பார்க்கும் போதும், கேட்க்கும் போதும் நெஞ்சம் பதை பதைக்கிறது.
இந்தியாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவிலேயே இது மிகவும் மோசமான பேரழிவாகும். அதில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களுக்கு "இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே" என்ற அடிப்படையில் நம்மாலான உதவிகளை செய்திட வேண்டுமென்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடி பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு உதவி செய்திட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, தே.மு.தி.க.வின் பத்தாம் ஆண்டு துவக்க நாளான இன்று (14.09.2014) தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை பாரத பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளனர் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய நாடு நம்நாடு, இந்தியர்கள் அனைவரும் நம் சொந்தங்கள் என்ற உணர்வோடு, தொழிலதிபர்களும், வணிகர்களும், இளைஞர்களும் மற்றும் அணைத்து தரப்பினரும் ஜம்மு-காஷ்மீர் பேரழிவிற்கு நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.