சோர்வுடன் விஜயகாந்த்.. சிகிச்சைக்குப் பின் முதல் முறையாக எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு
சென்னை: உடல் நல பாதிப்பால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது உடல் நலிவைப் பொருட்படுத்தாமல் கட்சி எம்.எல்.ஏக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
விஜயகாந்த் வீட்டுக்கு எம்.எல்.ஏக்கள் வரவழைக்கப்பட்டு அவர்களை விஜயகாந்த் சந்தித்தார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் விஜயகாந்த் திரும்பினார். விமான நிலையத்திலிருந்து அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டதால் அவரது உடல் நலம் குறித்து கட்சியினர் மத்தியில் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சைக்குப் பின்னர் முதல் முறையாக கட்சி எம்.எல்.ஏக்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அவரது சாலிகிராமம் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்தும், தேமுதிகவின் செயல் பாடு குறித்தும் விஜயகாந்த் எம்.எல்.ஏக்களிடம் கேட்டார்.
அதன் பின்னர் வருகிற 25ம் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், செப்டம்பர் 14ம் தேதி தேமுதிகவின் 10வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.