63 வயதில் விஜயகாந்த்.. நாளை தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் கொண்டாட்டம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 63வது பிறந்த நாளையொட்டி நாளை தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் அதை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
வறுமை ஒழிப்பு தினமாக இதை தேமுதிகவினர் கொண்டாடுகின்றனர். நேற்றே தனது பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார் விஜயகாந்த்.
நாளை மத்திய சென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தாமரை கண்ணன் தலைமையில் மதியம் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேட்டி-சேலைகள் வழங்கப்படுகின்றன. மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. நாளை மதியம் வடபழனி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுக்கப் படுகிறது.
வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் யுவராஜ் தலைமையில் பெரம்பூர் மாதா ஆலயத்தில் நாளை சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. முதியோர் இல்லத்தில் உள்ள 1063 பேருக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கப்படுகிறது. கொளத்தூரில் காப்பகத்தில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது. 630 மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
ஏழைகளுக்கு மருத்துவ முகாமும் நடக்கிறது. 63 இடங்களில் கொடி ஏற்றி கட்சியின் பெயர் பலகை திறந்து வைத்து இனிப்பு வழங்கப்படுகிறது.
மேற்கு சென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நாளை முகப்பேரில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அயப்பாக்கத்தில் 1000 பேருக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. விருகம்பாக்கத்தில் மருத்துவ முகாம் நடக்கிறது.
கே.கே.நகரில் மாணவ- மாணவிகளுக்கு இலவச உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்படுகின்றன. சாலிகிராமத்தில் பொது மக்களுக்கு குடிநீர் குழாய் அமைத்து கொடுக்கப்படுகிறது.
தென்சென்னை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வி.என்.ராஜன் தலைமையில் நாளை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 1063 பேருக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்படுகின்றன. அனாதை இல்லங்களுக்கு மளிகை பொருட்களும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலைகள், தையல் எந்திரம் போன்றவை வழங்கப்படுகின்றன.
மும்பையில் மகாராஷ்டிர மாநில தே.மு.தி.க. செயலாளர் சிவா தலைமையில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.