40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்... மு.க.ஸ்டாலின்
மதுரை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் வியாழன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது.
இதற்கான பிரச்சாரம் நாளையோடு முடிய உள்ள நிலையில், மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரச்சாரன் நிறைவு...
நாளை திருச்சியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளேன். 40 தொகுதியிலும் பிரசாரத்தை முடித்துள்ளேன்.
40 தொகுதிகளிலும் வெற்றி நமக்கே...
தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆதரவு அலை வீசுகிறது. எனவே நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.வெற்றிக்கு காரணம் ஜெ. தான்...
இதற்கு காரணம் ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பாஜக்வின் தேர்தல் அறிக்கை...
தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். தமிழக மக்கள் இதை உணர்ந்துள்ளார்கள். பாரதீய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை கூட கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வில்லை.
மதுரையில் எழுச்சி...
மதுரையில் நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது பல மடங்கு எழுச்சியை பார்த்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கல் அல்ல... அன்பின் கொடி கம்பு...
பிரசாரத்தின்போது எனது வேனில் கல் வீசியதாக கூறுகிறார்கள். ஆனால் யாரும் கல் வீசவில்லை. அதற்கு மாறாக பிரசாரத்தின்போது, திரண்டிருந்த பொதுமக்கள் என்னை பேச வலியுறுத்தி அன்பின் கொடி கம்புகளால் மறித்தனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.