எங்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள்.. சொல்வது செல்லூர் ராஜு மற்றும் அதிமுகவினர்!!
மதுரை: திமுகவினர் தங்களை மிரட்டுவதாக அதிமுக ஒரு புகார் கொடுத்துள்ளது.
ஆளுங்கட்சியினரைப் பார்த்து எதிர்க்கட்சியான திமுக மிரட்டுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட இந்தப் புகார் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேயர் ராஜன் செல்லப்பா, தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ சுந்தரராஜன் உட்பட 50 பேர் சகிதம் கலெக்டர் அலுவலகம் வந்த செல்லூர் ராஜு, கலெக்டரிடம் இப்படி ஒரு புகாரைக் கொடுத்தார்.
மேலும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் ராணியிடமும் புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசுகையில், அதிமுகவினர் கட்சி வேலை செய்யும்போது, கரிமேடு, ஆரப்பாளையம், காளவாசல் பகுதிகளில் திமுகவினர் ரவுடிகளை வைத்து அதிமுகவினரை மிரட்டியுள்ளனர்.
ஆகையால் தேர்தலுக்கு முன்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம். கலெக்டர் புகாரை மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார் ராஜு.
அப்போது செய்தியாளர்கள், மதுரை திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் காசிநாதன் தலைமையில், திங்கள்கிழமை திமுகவினர் மதுரை தேர்தல் பார்வையாளர் ராணியிடம், அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, நாங்க ஏன் காசு கொடுக்க வேண்டும். அம்மா சாதனையே நூறாண்டுகள் பேசுமே என்றார் ராஜு.