"கனிமொழி, ராசா, தயாநிதி": திமுகவில் வெடித்த புதிய 'கலகக் குரல்'
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன் மற்றும் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோரை திமுகவை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு அமைப்புச் செயலர் பெ.வீ. கலியாணசுந்தரம் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடிதத்தில் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கலியாணசுந்தரம் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக தோல்வி...
லோக்சபா தேர்தலுக்கு முன்பு திமுகவில் மு.க. அழகிரி கலகக் குரல் எழுப்பினார். இதனால் அவர் கட்சியைவிட்டே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போதும் முல்லைவேந்தன் போன்றோர் திமுக தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். தற்போது திடீரென திமுக அமைப்புச் செயலர் பெ.வீ.கலியாணசுந்தரம் புதிய கலகக் குரலை எழுப்பியுள்ளார்.
ராஜினாமா கடிதத்தோடு கோரிக்கை கடிதம்:
பெ.வீ. கல்யாணசுந்தரம் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
என் உயிரினும் மேலான தலைவருக்கு என்று தொடங்கும் அந்த கடிதத்தில் 5 கோரிக்கைகளை கருணாநிதிக்கு பெ. கலியாணசுந்தரம் முன்வைத்துள்ளார். பெ.வீ.கல்யாணசுந்தரம் முன்வைத்துள்ள 5 கோரிக்கைகள்:
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்:
என் உயிரினும் மேலான தலைவர் அவர்களுக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கழகம் வலுப்பெறும் என்பது என் எண்ணம்.
- 2016 சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக உடனடியாக அறிவிக்க வேண்டும்.
கனிமொழி, ராசா, தயாநிதி மாறன்:
- சகோதரி கனிமொழி, திருவாளர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.
உடனடியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்:
- பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களுக்கு உடனடியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மா.செக்கள் 2 முறைக்கு மேல் பதவிக்கு வரக் கூடாது:
- ஒன்றிய, நகர, பகுதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
நில அபகரிப்பு செய்தோரை விலக்கி வைக்க வேண்டும்:
- நில அபகரிப்பு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட கழக முன்னணியிருக்கு கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கக்கூடாது.
இவ்வாறு கோரிக்கைகளை முன் வைத்துள்ள கலியாணசுந்தரம் கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து
பெ.வீ.கலியாணசுந்தரத்தின் ராஜினாமா குறித்து மற்றொரு திமுக அமைப்புச் செயலர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:
- அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர்கள், நேரடியாக கட்சித் தலைமையிடம் தனது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
- அதைத் தவிர்த்து பத்திரிகைகளுக்கு தனது ராஜினாமா கடிதத்தை கலியாணசுந்தரம் அனுப்பியுள்ளளார்.
- கலியாணசுந்தரத்தின் நடவடிக்கை வருத்தத்துக்குரியது.
- ஏதோ ஒரு உள்நோக்கத்தின் காரணமாக கலியாணசுந்தரம் செயல்படுகிறார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது