பாஜகவை போட்டுத் தாக்கும் ஜெ.... ஓட்டுகள் பிரியும் என திமுக மகிழ்ச்சி!!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதாவை முதல்வர் ஜெயலலிதா வெளுத்து வாங்கத் தொடங்கியிருப்பதால் தங்களுக்கு எதிரான வாக்குகள் சிதறும் என்பதால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் திமுக தலைவர்கள்.
லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை முதன் முதலில் தொடங்கியவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் பிரசாரம் தொடங்கிய முதல் 40 நாட்கள் காங்கிரஸ்- திமுகவை மட்டுமே பிடி பிடி என உலுக்கி எடுத்தார். பாரதிய ஜனதாவை மருந்துக்கும் கூட எந்த ஒரு இடத்திலும் விமர்சிக்காமல் மவுனமாகவே இருந்து வந்தார் ஜெ.
பாரதிய ஜனதாவை ஜெயலலிதா விமர்சிக்காதது மட்டுமல்ல.. மோடிக்கு ஓட்டுப் போடுவதும் அம்மாவுக்கு ஓட்டுப் போடுவதும் ஒன்றுதான் என்று அதிமுகவினர் பிரசாரமும் செய்யத் தொடங்கினர். இது பாரதிய ஜனதா கூட்டணிக்கு தலைவலியைக் கொடுத்தது. எங்கே ஒட்டுமொத்த வாக்குகளும் அதிமுகவுக்கே போய்விடுமோ என்று அந்த கூட்டணித் தலைவர்கள் கலங்கிப் போனார்கள்.
வைகோ கொந்தளிப்பு
அதனால்தான் மதிமுக பொதுச்செயலர் வைகோ, அதிமுகவினர் மோடி பெயரை சொல்லி ஓட்டு கேட்பது அயோக்கியத்தனமானது என்று கொந்தளித்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசனும் அதிமுகவின் இந்த அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார்.
ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள்
ஆனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு அதிரடி பிரசாரத்தை மேற்கொண்டன. எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பாரதிய ஜனதாவை ஏன் விமர்சிக்கவில்லை? ஏன் மோடியின் பெயரில் அதிமுக ஓட்டுக் கேட்கவேண்டும்? தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கப் போகிறது.. இது அவர்கள் நடத்தும் நாடகம் என்று ஒரு சேர போட்டுத் தாக்கினர்.
ஸ்டாலின் குடைச்சல்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து நாமக்கல் வரை 32 நாட்கள் பங்கேற்ற அனைத்து பிரசார கூட்டங்களில் விடாமல் இதை முன்வைத்து விமர்சித்து வந்தார்.
இடதுசாரிகள் பாய்ச்சல்
இடதுசாரிகளும் தங்களது பங்குக்கு, பாஜகவுடன் கூட்டணி சேரவை எங்களை ஜெயலலிதா கழற்றிவிட்டார் என்று வரிந்து கட்டிக்கொண்டு வசைபாடினர்.
விடாத காங்கிரஸ்
காங்கிரஸின் ப.சிதம்பரம் போன்றவர்களும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் ஜெயலலிதா என்பதையே அவரது தேர்தல் பிரசாரம் வெளிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டி பேசினார்.
தவ்ஹீத் விலகல்
எதிர்க்கட்சிகளின் இந்த பிரசாரத்துக்கு பலனளிக்கும் வகையில் திடீரென அதிமுகவுக்கான ஆதரவை தவ்ஹீத் ஜமாத் விலக்கிக் கொண்டதுடன், பாஜகவை அதிமுக விமர்சிக்காததை ஒரு காரணமாகவும் சுட்டிக் காட்டியது. இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
கரூரில் பாஜக மீது தாக்குதல்
வேறுவழியில்லாமல் கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் காவிரி பிரச்சனையில் மட்டும் பாரதிய ஜனதாவை கடுமையாகத் தாக்கி வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தார். அப்பாடா! இனி அதிமுகவினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டுக் கேட்க மாட்டார்கள் என்ற நிம்மதி பாஜக அணிக்கு வந்தது.
விடாத எதிர்க்கட்சிகள்
அதே நேரத்தில் திமுக, இடதுசாரிகளோ, காவிரி பிரச்சனையில் மட்டும்தான் பாஜகவை எதிர்ப்பீர்களா? மதவாத பிரச்சனையில் ஏன் எதிர்க்கவில்லை என்று கொக்கிப் போட இதற்கும் அடிபணிந்தவராக ஜெயலலிதா மீனவர் பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சனை என பாஜகவை தாக்கும் எல்லையை விரிவாக்கிக் கொண்டார்.
ஜெ. பாய்ச்சலில் நிம்மதியான பாஜக
இப்போது பாஜக அணிக்கு முழு நிம்மதி கிடைத்துவிட்டது. நிச்சயமாக அதிமுகவினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கவே மாட்டார்கள் என்று திடநம்பிக்கை. ஆனாலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விடுவதாக இல்லை.. பாஜகவின் ராமர் கோயில்.. பொதுசிவில் சட்டம் பற்றி எல்லாம் ஏன் பேசுவதே இல்லை ஜெயலலிதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்..
ஓட்டு பிரிகிறதே..
திமுக, இப்படி பாஜகவை நோக்கி ஜெயலலிதா திசை திருப்பிவிடுவது "கொள்கை" வழிமட்டுமல்ல.. ஓட்டு வேட்டையும் ஒரு காரணம்.. அதிமுகவும், பாஜகவும் நெருக்கமான நட்பு பாராட்டிக் கொண்டு இருவேறு அணிகளில் இருந்தால் இரண்டும் ஒன்றுதானே என்ற எண்ணத்தில் திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒட்டுமொத்தமாக ஒரே கட்சிக்கு அதிமுகவுக்கு அல்லது பாஜக அணிக்கு செல்லக் கூடும். தற்போதைய சூழலில் அப்படி செல்லும் வாக்குகள் அதிமுகவுக்கே அதிகம் கிடைக்கக் கூடும்.
நீலகிரி கணக்குக்கு ஆப்பு
இதை கணக்கில் வைத்துதான் நீலகிரியில் பாஜகவை அதிமுக வளைத்துப் போட்டதாக சொல்லப்பட்டது. அதாவது திமுகவுக்கு எதிரான ஒட்டுமொத்த வாக்கும் அதிமுகவுக்கு வரும் என்பதால் நீலகிரியில் பாஜக வேட்பாளரே இல்லாமல் செய்யப்பட்டது. அதனால் அப்போது திமுக வேட்பாளர் ஆ. ராசாவுக்கு நெருக்கடியானது. ஆனால் தற்போது அதிமுக வேறு- பாஜக வேறு என்று இரு அணிகளாகப் பிரித்துவிட்டுவிட்டது திமுக.
சிதறும் வாக்குகளால் மகிழ்ச்சியில் திமுக
இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒரே அணிக்கு செல்லாமல் சிதறக் கூடிய நிலை. இப்படி எதிர்ப்பு வாக்குகள் சிதறுவது என்பது நீலகிரியில் மட்டுமின்றி பல தொகுதிகளிலும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது திமுகவின் கணக்கு. இதனால் பாஜகவை ஜெயலலிதா விமர்சிக்க விமர்சிக்க ஓட்டுகள் பிரிந்து கொண்டே இருக்கும் என திமுகவினர் குதூகலித்துக் கொண்டே இருக்கின்றனர்.