திமுக பூஜ்ஜியம் ஆகிவிட்டது, அங்கிருந்த ஒரு 'பூ'வும் வேறு போய்விட்டது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: காங்கிரஸை பூஜ்ஜியமாக நினைத்த திமுக தற்போது பூஜ்ஜியமாகிவிட்டது. அங்கிருந்த ஒரு பூவும் போய்விட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் 44வது பிறந்தநாள் விழாவை தமிழக காங்கிரஸார் இன்று கொண்டாடினர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
மோடி
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸார் யாரும் சோர்ந்து போய்விடவில்லை. இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்று கூறும் நாள் விரைவில் வரும். எந்த விஷயத்திலும் மோடி தன்னை தான் முன்னிலைப்படுத்துகிறார். அவரது சாயம் விரைவில் வெளுக்கும்.
இந்தி
ஒரு காலத்தில் இந்தியை எதிர்த்து போராடினோம். இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. அதனால் விரைவில் இந்தியை எதிர்த்து போராட வேண்டி இருக்கும்.
அமைச்சர்
காங்கிரஸ் ஆட்சியில் புகார்களில் சிக்கிய அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் தற்போதோ பாலியல் புகாரில் சிக்கியவர் மத்திய அமைச்சராக உள்ளார்.
பூஜ்ஜியம்
தமிழகத்தில் காங்கிரஸ் வெறும் பூஜ்ஜியம். அதை ஒதுக்கிவிட்டால் நாம் வெற்றி பெறலாம் என்று ஒதுக்கியவர்கள்(திமுக) நாடாளுமன்ற தேர்தலில் பூஜ்ஜியமாகிவிட்டனர். காங்கிரஸ் மீது பழியை போட்டு தப்பிவிடலாம் என்ற உங்களின் கனவும் கலைந்துவிட்டது. தற்போது அங்கிருந்த ஒரு பூவும் போய்விட்டது.
ஒற்றுமை
எந்த மக்கள் நம்மை புறக்கணித்தார்களோ அந்த மக்களே நமக்கு மகுடம் சூட்டும் காலம் வரும். ஞானதேசிகன் கட்சியினரை அனுசரித்துச் செல்கிறார். மனக்கசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.