திமுகவுக்காக சட்டசபையில் ஒரே அணியாக குரல் கொடுக்கும் 6 கட்சிகள்.. தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம்?
சென்னை: தமிழக சட்டசபையில் திமுகவுக்காக ஒட்டுமொத்தமாக 6 கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுப்பது.. வெளிநடப்பு செய்வது என அணி சேருவதே சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடர் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் 2வது நாளன்று மவுலிவாக்கம் கட்டிட விபத்து பேசுவதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் அனுமதி கோரினர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுகவை தொடர்ந்து தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
திமுகவும் 6 கட்சிகளும் வெளிநடப்பு
அதன் பின்னர் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பும் போது அவர்களுக்கு ஆதரவாக 6 கட்சி எம்.எல்.ஏக்களும் பேசுவது என்ற போக்கு நீடித்து வந்தது. திமுகவினர் தனியே வெளிநடப்பு செய்ய அவர்களைப் பின் தொடர்ந்து இதர கட்சிகள் வெளிநடப்பு செய்வதும் வழக்கமாக இருந்தது.
திமுகவுக்காக 6 கட்சிகள் குரல்
திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்காக இந்த 6 கட்சி எம்.எல்.ஏக்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வெளிநடப்பும் செய்தனர்.
கூட்டணிக்கான முன்னோட்டம்
இப்படி திமுக தலைமையில் 6 கட்சிகளும் ஒருங்கிணைந்து சட்டசபையில் செயல்படுவது என்பதே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிக்கு முன்னோட்டம்தான் என்றும் கூறப்படுகிறது.
விரக்தியில் தேமுதிக
பாரதிய ஜனதா அணியில் தேமுதிக இடம்பெற்ற போதும் ராஜ்யசபா எம்.பி அல்லது மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால் அதற்கான சாத்தியமே இல்லை என்று தெளிவாகிவிட்டது.
வழிதெரியாமல் இடதுசாரிகள்
இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் பாஜகவுடன் இணக்கத்தை விரும்புகிற அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலைதான் உள்ளது.
ஏக்கத்தில் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியும் எப்படியாவது திமுகவுடன் கூட்டணி அமைந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் ஏக்கத்துடன்தான் இருக்கிறது. புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை தற்போதும் திமுக அணியில்தான் இருக்கிறது.
யதார்த்தம் இது..
இந்த கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில்தான் சட்டசபை தேர்தலை சந்தித்தாக வேண்டிய யதார்த்த நிலைமை இப்போது இருக்கிறது. இதனால்தான் சட்டசபையில் கரம் கோர்த்து செயல்பட்டு எதிர்கால கூட்டணிக்கு அச்சாரம் போடுகின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுக என்ன செய்யும்?
அப்படி திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தால் அதிமுகவுக்கு நெருக்கடி அதிகரிக்கும்; இதனால் கட்சிகளை உடைப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி மும்முரமாக்கும் என்றும் கூறப்படுகிறது.