ரீமான் தயாநிதி மாறன் கோ அப்நா பஹ்முல்ய மத் தேகர்....
என்ன இது என்று பார்க்கிறீர்களா... மத்திய சென்னைத் தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறனுக்காக அடிக்கப்பட்டுள்ள இந்தி போஸ்டர்கள்.
'உங்கள் பொன்னான வாக்குகளை தயாநிதி மாறனுக்கு அளித்து வெற்றி பெறச் செய்வீர்' என்ற தமிழ் வாசகங்களைத்தான் இந்தியில் இப்படி போஸ்டர்களில் போட்டு மத்திய சென்னையில் சில இடங்களில் ஒட்டி வைத்துள்ளனர்.
போஸ்டர் கிடக்கட்டும்.. தேர்தல் நடப்பது தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில்தானே... டெல்லியில் அல்லவே?
இந்தியில் போஸ்டர் அடித்து ஒட்டி வாக்கு கேட்கும் அளவுக்கு வட மாநில மக்கள் மத்திய சென்னையில் பெருகிவிட்டார்களா? ராஜஸ்தானியில் பேசிக் கொண்டாலும், தினத்தந்தியை தமிழர்களை விட பக்காவாக படிக்கும் மார்வாடிகள்தானே இங்கிருப்பவர்கள்?
ரிச்சி தெரு, நரசிங்கபுரம், சிந்தாதிரிப் பேட்டையில் தமிழர்களே இல்லையா?
புதிதாக சென்னைக்குப் படையெடுத்த அஸ்ஸாம் - பீகாரிகள் அதற்குள் வாக்குரிமை பெற்றுவிட்டார்களா?
பிறமொழிக்காரர்களையும் தமிழ் படிக்க வைத்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று சொன்ன இயக்கம், வாக்குக்காக சொந்த மண்ணிலேயே இந்திக்கு தாவியிருப்பதை என்னவென்பது!
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற ஆயுதத்தை வைத்து தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் இயக்கமாக உருவெடுத்த திமுகவின் பரிணாம வளர்ச்சியா இது?
இந்தி தெரிந்ததால் என் பேரன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கினேன் என்று கருணாநிதி சொன்ன விளக்கத்தை நியாயப்படுத்த இந்த போஸ்டர்களை அடித்திருக்கிறார்களா? (போஸ்டரில் தயாநிதி மாறனின் கெட்டப்பைப் பாருங்கள்... அசல் மார்வாடி ரேஞ்சுக்கு... பஹூத் அச்சா!)
-யாராவது பதில் சொல்லுங்கப்பா!