வாகை முத்தழகனைத் தொடர்ந்து அதிமுகவில் இணையத் தயாராகும் திமுக பேச்சாளர்கள்
சென்னை: முன்னாள் தி.மு.க. பேச்சாளர் வாகை முத்தழகன், இன்று நாகர்கோவிலில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.
செயலாளர் தளவாய் சுந்தரத்தை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ.யும், துணை செயலாளருமான ராஜன் செய்திருந்தார்.
வாகை முத்தழகனைப் போல இன்னும் சில திமுக பேச்சாளர்கள் அதிமுகவில் இணையத் தயாராக உள்ளனராம். இதற்கான வேலைகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறதாம்.
ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு திமுக ஸ்டார் பேச்சாளர்களுக்கு 10000 ரூபாயும், நடுத்தர பேச்சாளர்களுக்கு 5ஆயிரம் ரூபாயும், வளரும் பேச்சாளர்களுக்கு 3000 ஆயிரம் ரூபாயும் சன்மானம் கொடுக்கப்படுவது வழக்கம். இதுதான் பலருக்கு வாழ்க்கை நடத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
சமீபகாலமாக திமுகவில் நிலவும் கோஷ்டிப்பூசலினால் பேச்சாளர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையாம். சமீபத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டங்களில் நிறைய பேச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
ஒதுக்கப்படும் ஆ.ராசா, திருச்சி சிவா
கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களான ஆ.ராசாவும், திருச்சி சிவாவும் அன்மைக்காலமாக பேச்சாளர்கள் பட்டியலை கவனிக்குப் பொறுப்பில் இல்லையாம். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆள் ஆளுக்கு நாட்டாமை செய்கின்றனராம்.
அதிமுகவை நோக்கி
சமீபத்தில் திருப்பூர் நாகராஜ் என்ற பேச்சாளர், தனது மகனின் கல்லூரி படிப்புக்கு பணம் கட்ட முடியாமல் அதிமுகவில் இணைந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமனூர் புகழேந்தியும் வறுமை காரணமாகவே, அதிமுகவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
வாகை முத்தழகன்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேச்சாளர் வாகை முத்தழகன். இவர் திமுக தலைமைக்கழகப் பேச்சாளராக இருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வாகை முத்தழகன், இளைஞர் அணி தளபதி என கூறும் ஸ்டாலினுக்கு 60 வயது ஆகிவிட்டது. கண் தெரியாதவர், காது கேட்காதவர்களை எல்லாம் இளைஞர் அணியில் வைத்திருந்தால் கட்சி எப்படி வளரும். சிறையில் இருக்கும் கனிமொழி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றார்.
கட்சியை வீட்டு நீக்கம்
தொடர்ந்து கட்சிக்கட்டுப்பாட்டினை மீறும் வகையில் பேசி வந்ததாக்கூறி கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகாலமாக அரசியல் மேடைகளில் இருந்து விலகியிருந்த வாகை முத்தழகன் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஓரங்கப்பட்ட பேச்சாளர்கள்
வெற்றிகொண்டான் இருந்தவரை திமுகவில் பேச்சாளர்களுக்கு மேடைகள் கிடைத்தனவாம். அவரது மறைவுக்குப் பின்னர் திண்டுக்கல் லியோனியின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதாம். இதனால் பல பேச்சாளர்கள் ஓரம்கட்டப்படுகின்றனராம்.
அறிவாலயத்தில் இருந்து
கரூர் முரளி, கந்திலி கரிகாலன், வி.பி.ஆர். இளம்பரிதி, ஆலந்தூர் ஒப்பில்லாமணி, திருப்பூர் கூத்தரசன், சேலம் கோவிந்தன், என பல பேச்சாளர்கள் இப்படி ஓரம்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதிமுகவை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனராம்.
இழுக்கும் ரித்தீஷ்
திமுகவின் முன்னாள் எம்.பி ரித்தீஷ்தான் பல முக்கிய பேச்சாளர்களை அதிமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பல பேச்சாளர்கள் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.