சீக்கிரமே திமுக சந்தி சிரிக்கும்.. மு.க.அழகிரி சாபம்!
மதுரை: திமுகவில் நிறைய நடக்கிறது. அவை வெளியில் வரும்போது சந்தி சிரிக்கும். அது விரைவில் நடக்கும் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் படு தோல்விக்குப் பின்னர் திமுக எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக முன்னாள் அமைச்சர்களான முல்லைவேந்தன், பழனி மாணிக்கம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது இதில் முல்லைவேந்தனை திமுக நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளது. அதேசமயம், பழனி மாணிக்கத்தையும், தர்மபுரி வடக்கு மாவட்டச் செயலாளர் இன்பசேகரனையும் கட்சித் தலைமை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது.
இதுகுறித்து மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அவரும் இதையேதானே சொன்னார்
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் முல்லைவேந்தன் என்ன கருத்தை சொன்னாரோ, அதே கருத்தைத்தான் கே.பி.ராமலிங்கம் எம்.பி.யும், கூறியிருந்தார்.
கரை வேட்டியுடன்தான் சொன்னார்
தி.மு.க. கரை வேட்டியை கட்டிக்கொண்டு தான் கே.பி.ராமலிங்கம் பேட்டியளித்தார். ஆனால் முல்லைவேந்தனை நீக்கிய கட்சி தலைமை கே.பி.ராமலிங்கத்தை நீக்கவில்லை.
ராமலிங்கத்தைப் பார்த்துப் பயப்படுகின்றனர்
அவர் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பதால் அவரை நீக்க பயப்படுகின்றனர். இதனால் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குழப்பமே வரும்
கட்சியில் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் மேலும், மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துமே தவிர சிக்கலை தீர்க்க உதவாது.
சந்தி சிரிக்கப் போகிறார்கள்
தி.மு.க.வில் இன்னும் நிறைய நடக்கின்றன. அவை வெளியில் வரும்போது சந்தி சிரிக்கும். அது கூடிய விரைவில் நடக்கும் என்றார் அழகிரி.
கே.பி.ராமலிங்கம் அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.