பார்த்துப் பார்த்து காய் நகர்த்திய 'பலே' அதிமுக.. ராசாவுக்கு வைத்த 'செக்'!
ஊட்டி: திமுக வேட்பாளர் ராசாவின் கை நன்றாகவே ஓங்கியிருந்த நிலையில் தடாலடியாக அதிமுக தரப்பில் நடந்த சில பல முயற்சிகளால் தற்போது ராசாவின் வெற்றி வாய்ப்பு மங்கி விட்டதாக கூறப்படுகிறது.
நீலகிரி தனித் தொகுதியில் ராசா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்டவை களத்தில் இருந்தன.
ஆனால் திடீரனென பாஜக வேட்பாளரின் வேட்புமனு சொதப்பியதால் அக்கட்சியால் போட்டியிட முடியாமல் போய் விட்டது. வேட்பாளரை அதிமுக விலைக்கு வாங்கி விட்டதாக பலமாக பேச்சு அடிபடுகிறது.
பாஜக வேட்பாளர் களத்தில் இருந்தவரை திமுகவுக்கு இந்தத் தொகுதி சாதகமானதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக போட்டியிடாமல் போனதால் தற்போது அதிமுகவுக்கு சாதகம் கூடியுள்ளதாக கருதப்படுகிறது.
பெரும்பாலான தொகுதிகள் அதிமுக வசம்
நீலகிரி தொகுதியின் கீழ் வும் ஐந்து சட்டசபைத் தொகுதிகளில் ஊட்டி, மேட்டுப்பாளையம், அவிநாசி ஆகிய மூன்றும் அதிமுக வசம் தற்போது உள்ளன. குன்னூர், கூடலூர் திமுகவிடம் உள்ளது. பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் உள்ளது.
அதிருப்தி அலையில் அதிமுக வேட்பாளர்
இங்கு அதிமுக சார்பில் கோபாலகிருஷணன் போட்டியிடுகிறார். இவர் குன்னூர் நகராட்சித் தலைவராக இருந்தவர். இவர் மீ்து குன்னூரில் நல்ல பெயரை இல்லையாம். காரணம், மக்கள் அநத அளவுக்கு இவரது செயல்பாட்டால் நொந்து நூடூல்ஸாகியுள்ளனர். குடிநீர்ப் பிரச்சினைதான் மக்களின் பெரும் குறையாகும்.
குன்னூரில் ராசா அலை
அதேசமயம், குன்னூரில் ராசாவுக்கும், திமுகவுக்கும் நல்ல ஆதரவு காணப்படுகிறது. படுகர் இனத்தவர் மத்தியிலும் ராசாவுக்கும், திமுகவுக்கும் ஆதரவு அலை காணப்படுகிறதாம்.
மக்களைச் சந்திப்பதில் ராசாவுக்கு நிகர் ராசாதான்
அதேபோல மக்களைச் சந்தித்து குறை கேட்பதன் மூலமும் மக்களிடையே நல்ல பெயர் வைத்துள்ளார் ராசா. அவரால் வர முடியாவிட்டாலும் கூட மனுக்களை எப்படியவாது வாங்கி குறைக் கேட்டு விடுவார் ராசா. மாதம் ஒருமுறை தொகுதிக்கும் வந்து போயுள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் மனதில் ரயில் விட்ட ராசா
அதேபோல மேட்டுப்பாளையம் - கோவை இடையே தினசரி ரயில் சேவை அதிகரித்ததற்குக் காரணமே ராசாதான். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குன்னூரைப் போலவே மேட்டுப்பாளையத்திலும் ராசாவுக்கு நல்ல பெயர் உள்ளதாம்.
ஊட்டியில் தத்தளிக்கும் அதிமுக
இதேபோல ஊட்டியிலும் அதிமுகவுக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை. ஊட்டி வாழ் மக்களிடையே தங்களது அடிப்படைத் தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. சாலை வசதிகள் சரியில்லை என்பது அதில் ஒரு முக்கிய குறை.
கொடநாடு சாலைக்கு ராஜ மரியாதை
கொடநாடு எஸ்டேட்டுக்குச் செல்லும் சாலையை மட்டும் பார்த்துப் பார்த்துப் போடும் அதிமுக அரசு, பிற சாலைகளை கண்டு கொள்ளாமல் விட்டதும் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
அதேசமயம்
இ்படி ஒரு பக்கம் ராசாவுக்கும், திமுகவுக்கும் ஆதரவு அலை இருந்தாலும் கூட 2ஜி ஊழல் விவகாரம் தொகுதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் காண முடிகிறது.
பாஜக மட்டும் இருந்திருந்தால்
இந்த நேரத்தில்தான் பாஜக வலுவான கூட்டணி அமைத்து களத்தில் குதித்ததால் பலரும் பாஜக பக்கம் சாயத் தீர்மானித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டத்தைக் கலைத்து விட்டார் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி. இதை அவருக்காக வாக்களிக்க காத்திருந்த நீலகிரி மககள் எதிர்பார்க்கவில்லை.
அதிமுக வேட்டை ஆரம்பம்
இதனால் அதிமுக குஷியாகியுள்ளது. திமுக மறறும் ராசா அதிருப்தி வாக்குகளை பாஜக பிரிக்காமல் தடுத்து விட்டதால், தங்களது வெற்றி வாய்ப்பு உறுதி என்பது அதிமுகவின் கணக்காகும்.
கடந்த தேர்தலில்
கடந்த தேர்தலில் ராசா இங்கு மொத்தம் 3.17 லட்சம் வாக்குகளை அள்ளினார். வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 86.021 ஆகும். 2வது இடத்தை அதிமுக கூட்டணியில் மதிமுக பெற்றது. 3வது இடத்தில் தேமுதிகவும், 4வது இடத்தை கொமுகவும் பெற்றன. பாஜகவுக்கு 5வது இடமே கிடைத்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாக்கு மிச்சம்
கடந்த தேர்தலில் பிரிந்து போட்டியிட்ட மதிமுக, பாஜக, தேமுதிக, கொமுக ஆகியவை இன்று ஒரே அணியாக உள்ளன. ஆனால் போட்டியிட வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இதனால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாக்குகள் பிரிவதை அதிமுக தடுத்துள்ளதாக கருதப்படுகிறது.