வருங்கால எம்.பிக்கள்... படிப்போ.. அடேங்கப்பங்கப்பா!
சென்னை: வேட்பாளர்களின் பயோ டேட்டாக்களை சற்று தோண்டிப் பார்த்தால் அடேங்கப்பா.. சிலிர்க்க வைக்கிறது.. திகிலாகவும் இருக்கிறது.
அவர்களது சொத்துக் கணக்குகளை கூட விட்டு விடுவோம்.. அவர்களது படிப்பு குறித்த விவரங்கள்தான் பயமுறுத்துவதாக உள்ளது.
ஒவ்வொருவரும் வெளியில் சொல்லும் படிப்பு ஒன்றாக இருக்கிறது. வேட்பு மனுவில் கூறியுள்ளது வேறாக உள்ளது.
அந்தக் குழப்படிகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.. வாருங்கள்.
ஜெகஜால ஜெகத்ரட்சகன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். இவரது படிப்புதான் தலையைச் சுற்ற வைப்பதாக உள்ளது.
என்னதான் படித்தீர்.. அய்யா
இவர் எம்.ஏ. படித்ததாக முன்பு சொல்லியிருந்தார் திமுக கருணாநிதி. அவரோ வழுதாவூர் என்ற ஊரில் அரசு உயர்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்ததாக வேட்புமனுவில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் பிட் நோட்டீஸ் இப்படிச் சொல்கிறதே...
ஆனால் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு கோரி திமுகவினர் அடித்துக் கொடுக்கும் பிட் நோட்டீஸ்களில் டிசைன் டிசைனாக அவரது படிப்பைப் போட்டுள்ளனர்.
ஒரு நோட்டீஸில் டி லிட்
ஒரு நோட்டீஸில் அவர் எம்.ஏ. டிலிட் படித்திருப்பதாக போட்டுள்ளனர்.
இன்னொன்றில் பிஎச்டியே...
இன்னொரு நோட்டீஸில் அவர் எம்.ஏ தவிர எம்.பில், பிஎச்டியெல்லாம் படித்திருப்பதாக போட்டு பீதியேற்படுத்தியுள்ளனர்.
மொத்தத்தில் அண்ணன் டாக்டரருப்பா...
மொத்தத்தில் ஜெகத்ரட்சகனை டாக்டர் என்று விளிக்கின்றன நோட்டீஸ்கள்.
மச்சான் சுதீஷ் என்ன படித்தார்
சேலத்தில் போட்டியிடும் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் பி.ஏ. பட்டதாரி என வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனுவிலும் அதை தெரிவித்திருந்தார். ஆனால், வடபுதுப்பேட்டை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பை 1984-ல் படித்ததாகச் சொல்லியிருக்கும் சுதீஷ், அதன் பிறகு ப்ளஸ் டூ படிப்பை எங்கே படித்தார் என்ற விவரத்தைச் சொல்லாமல் பச்சையப்பன் கல்லூரியில் 2004-ம் ஆண்டு பி.ஏ. முடித்ததாகச் சொல்லியிருக்கிறார்.
பி.காம்.. அதாவது அமைதியா இருங்கப்பா...
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல். அவருடைய பெயருக்குப் பின்னால் பி.காம். என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். வேட்புமனுவில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்துவிட்டு, ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஸோ. மேல கோடு போட மறந்துட்டார் போல.
டிகோப் ஓகே..ஆனால் பி.ஏ...
நாமக்கல் அதிமுக. வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம் பி.ஏ. டி.கோ-ஆப் படித்திருப்பதாக வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் வேட்புமனுவில் 2014-ல் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இறுதி ஆண்டு படிப்பதாகவும் சொல்லியிருக்கிறார் சுந்தரம்.
பி.எல்லா.. எல்எல்பியா...
சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பி.எஸ்ஸி., பி.எல். படித்திருப்பதாக சொல்கிறது வேட்பாளர் பட்டியல். வேட்புமனுவிலோ பி.எல். படிப்பைக் குறிப்பிடவில்லை. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்ததாக சொல்லியிருக்கிறார்.
அது ஓகே.. ஆனா அது என்னாச்சு பாய்...
அதிமுகவின் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அன்வர் ராஜா பி.எஸ்ஸி., எம்.ஏ. படித்ததாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. அவரோ சிவகங்கை ராஜா துரைசிங்கம் தேசிங் மெமோரியல் கல்லூரியில் பி.எஸ்ஸி. படித்ததாக சொல்லியிருக்கிறார். எம்.ஏ. பற்றி சொல்லவே இல்லை.
டிகிரி மேல கோடு போட்ட தங்கமே...
கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் தங்கம் பி.ஏ. டிகிரி வாங்கியவர் என சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ஆனால் வேட்புமனுவில் மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. கோர்ஸ் முடித்திருப்பதாகச் சொல்லி பி.ஏ. மேல் கோடு போட்டிருக்கிறார்.
எம்.ஏவை விழுங்கிய மல்லை சத்யா
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் மல்லை சத்யா, எம்.ஏ. படித்தவர் எனக் குறிப்பிட்டிருந்தார் வைகோ. ஆனால் சத்யாவோ வேட்புமனுவில் பி.ஏ-வை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். ஏன் எம்.ஏ.வை போட மறந்தார் மல்லை என்பது நமக்குத் தெரியவில்லை.