தமிழக கடல் பகுதியில் பாகிஸ்தான் கொடியுடன் சுற்றிய மர்ம படகு!
வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்பகுதியில் பாகிஸ்தான் கொடி கட்டிய படகு சுற்றுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை கடற்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடியுடன் ஒரு படகு சுற்றித் திரிவதாக போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் டெலிபோன் செய்தார்.
இதையடுத்து எஸ்.பி. பொன்னி உத்தரவின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல்படை போலீ சார், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேதாரண்யம் முதல் கோடியக்கரை வரை படகில் விடியவிடிய ரோந்து பணி மேற்கொண்டனர்.
மேலும் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களிடம் பாகிஸ்தான் கொடியுடன் படகு சென்றதா என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அப்படி எந்த படகும் வந்ததாக தகவல் கிடைக்கவில்லை. டெலிபோனில் பேசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது போல் இலங்கையில் இருந்தும் கடல்வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் உதவியுடன் தமிழகத்தில் உளவு பார்த்த தீவிரவாதிகளும் சிக்கியிருக்கின்றனர். இந்த நிலையில், வேதாரண்யம் கடற்பரப்பில் பாகிஸ்தான் கொடியுடன் படகு சுற்றுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.