”கழிப்பறை இல்லா வீடுகளில் குடியிருக்காதீர்” – அரசு ஊழியர்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் வேண்டுகோள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆலோசனைக் கூட்டத்தின்போது, கழிப்பறை இல்லாத வீடுகளில் அரசு ஊழியர்கள் குடியிருக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதார வாரவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட ஊரக பகுதிகளில் 3,82,232 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 1,57,166 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.
கழிப்பறை பயனற்ற வீடுகள்:
கழிப்பறை இருந்தும் 52,009 வீடுகளில் பயனற்ற நிலையில் உள்ளது. மாவட்டத்தில் 2,25,066 வீடுகள் கழிப்பறை இல்லாத வீடுகளாக கண்டறியப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களின் வீடுகள்:
2015 க்குள் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக உருவாக்கப்பட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின்வீடுகளில் கண்டிப்பாக கழிப்பறை இருக்க வேண்டும்.
வீடுகள் வேண்டாம்:
கழிப்பறை இல்லாத வாடகை வீடாக இருந்தால், உடனடியாக வேறு வீட்டிற்கு குடியேற வேண்டும்.
5 குடியிருப்புகளுக்கு ஒரு கழிப்பறை:
அதேபோல் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்ட முன்வர வேண்டும். வாடகை வீடுகளில் குறைந்தது 5 குடியிருப்புகளுக்கு ஒரு கழிப்பறையாவது இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு அவசியம்:
மேலும், கழிப்பறை அவசியம், கைகழுவுதல் முக்கியத்துவம், திட,திரவ கழிவுகளை அப்புறப்படுத்துதல் , குடிநீரை பாதுகாத்தல் போன்றவை முன்னிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.