போட்டி போட்டு திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுக, அதிமுகவினர்... குஷியில் வாக்காளர்கள்
குளித்தலை: குளித்தலையில் வாக்களர்களை விழிப்புணர்வு அடைய வைக்க திமுக திண்ணைப் பிரச்சாரம் நடத்தி வருகின்றது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சீமானூர் பிரபு போட்டியிடுகின்றார். ஆனால் பாஜக கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தர் இவருக்கு போட்டியாக களமிறங்கி உள்ளதால், திமுகவினர் சற்று திணறி வருகிறார்களாம்.
இந்த நிலையில், திமுகவினர் திடீரென மக்களை நேரில் சந்தித்து , தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, வேலை இல்லா திண்டாடம், கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, தண்ணீர் தட்டுப்பாடு, சாலை வசதி இல்லாமை போன்ற பல பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்களாம். அதுவும் குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் திமுக வினர் 24 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கிறார்கள்.
இதை அறிந்த அதிமுகவினர் சிறிது நேரத்தில் ஒன்று கூடி , திமுகவினர் சென்ற வழியிலேயே சென்று, மக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு கேட்டனர்.
இந்த இரு தரப்பையும் பார்த்த வாக்காளர்கள், ‘தம்பி எங்க வீட்டுல 4 ஓட்டு' என மறைமுகமாக தூண்டில் போடுகிறார்களாம்.