தர்மபுரி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி: தர்மபுரி எம்.பியான, பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ், தனது தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு சட்டசபைத் தொகுதிக்கு விஜயம் செய்து மக்களைச் சந்தித்து தனக்கு வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 19ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து மனுக்களை பெற்ற அன்புமணி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொருவரும் என்மீது பாசத்தினாலும் நம்பிக்கை யினாலும் மாற்றத்தை விரும்பியதாலும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். இந்த வெற்றி சாதாரணமானது அல்ல மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளீர்கள்.
இந்த மாற்றம் தமிழகம் முழுவதும் ஏற்படவேண்டும். அப்போது தான் மாற்றம் ஏற்படும் அரசு மதுக்கடைகள் மூலம் வருவாய் பெற்று இலவச திட்டங்களை தருகிறது. அதனால் எவ்விதமான வளர்ச்சியும் ஏற்பட போவதில்லை.
தர்மபுரி மாவட்டம் ஏழ்மையான மாவட்டம். ஆனால் சாராயம் குடிப்பதில் முதல் மாவட்டமாக உள்ளது. நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் மதுக்கடைகள் மூலம் அரசு கஜானவுக்கு செல்கிறது.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுத்து குடிநீர் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. அதனால் மாவட்ட மக்கள் குடிநீருக்காக அல்லல்படுகின்றனர். ஆனால் 30 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்கு குடிக்க தண்ணீர் இல்லை.
கடந்த காலத்தில் இரண்டாயிரம் கோடியில் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றபட்டது. அந்த திட்டத்தை தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பயன் பெரும் வகையில் நிறைவேற்ற வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகின்றனர்.
இந்த அலட்சிய போக்கை கண்டித்தும் ஒக்கேனக்கல் குடிநீர் திட்டத்தை மாவட்டம் முழுவதும் நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த மாதம் 19ஆம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அன்புமணி.