மோடி பிரசாரத்தை புறக்கணித்த ராமதாஸ்: வைகோவும் பங்கேற்காதது ஏன்?
ஈரோடு: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற ஈரோடு பிரசார கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நரேந்திரமோடி நேற்று தமிழகம் வந்தார்.
கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரியில் பா.ம.க. வேட்பாளர்களும், சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர்களும் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பாமக கூட்டத்தில்
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மோடி பிரசார கூட்டத்தில் பா.ம.க. வேட்பாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்க வில்லை.
கோபத்தில் ராமதாஸ்
தர்மபுரி தொகுதியில் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வந்த ராமதாஸ் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த மோடி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திருவண்ணாமலை தொகுதிக்கு பிரசாரம் செய்ய சென்று விட்டார்.
ஏமாற்றிய ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் வரை கிருஷ்ணகிரியில்தான் தங்கியிருந்தார். எனவே மோடி கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அதிருப்திக்கு காரணம்
ஆனால் திடீர் என்று திருவண்ணாமலை தொகுதிக்கு சென்று விட்டார். இதனால் பா.ம.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பா.ம.க. நிறுத்தி இருந்த வேட்பாளர்களை வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டதால்தான் ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக பா.ம.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் வைகோ
அதேபோல ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் மோடி. அந்த கூட்டத்தில் மோடியுடன் வைகோ பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏமாந்த தொண்டர்கள்
ஆனால் மோடி உடன் கூட்டத்தில் வைகோ பங்கேற்கவில்லை. விருதுநகருக்கு மோடி பிரச்சாரத்துக்கு வராததால் அவருக்கு அதிருப்தி என்கிறார்கள்.
விருதுநகர், மதுரை
வைகோ தனது தொகுதியில் மோடியை பிரசாரம் செய்ய முயற்சி மேற்கொண்டார். விருதுநகர், திருமங்கலம், மதுரை என ஏதாவது ஒரு இடத்தில் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி பிரசார பயணத்தில் இதில் எந்த ஊருமே இல்லை. பாதுகாப்பு காரணமாக இந்த ஊர்கள் இடம் பெறவில்லை. எனவே மோடிக்கு பதிலாக பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.