இந்தக் குடிகாரர்களால் எவ்வளவு பிரச்சனை பாருங்க.. ஊரே களேபரம்!
தர்மபுரி: ஆடிப் பெருக்குக் கொண்டாட்டத்திற்காக வந்த இடத்தில் தோட்டம் ஒன்றில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளது ஒரு கும்பல். அதை அந்தத் தோட்டத்து உரிமையாளர் தட்டிக் கேட்கப் போக அவரையும், அவரது மனைவியையும் அந்தக் குடிகார கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து விட்டது.
இதையடுத்து பெரும் கலவரமாகி, ஊரில் சாலை மறியல் போக்குவரத்து ஸ்தம்பிப்பு என்று போய் விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகிலுள்ள சில்லாரஅள்ளி என்ற கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள வந்த சுங்கரஅள்ளி பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் என்பவரும், அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் சேகர் என்பவரின் தோட்டத்திற்குச் சென்றனர். அங்கு உட்கார்ந்து பீர் உள்ளிட்ட மது வகைகளை அருந்தினர். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு சற்று அருகில்தான் சேகரின் வீடும் உள்ளது.
வீட்டுக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து மது அருந்துவதைப் பார்த்த சேகர் அதைத் தட்டிக் கேட்டார். எழுந்து போங்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் சங்கர் கோஷ்டிக்கு கடும் கோபம் வந்து விட்டது. கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து சேகரைக் குத்தி விட்டனர். சரமாரியாக அடிக்கவும் செய்தனர்.
இதைப் பார்த்து ஓடி வந்த சேகரின் மனைவி பச்சையம்மாள் அந்தக் கும்பலைத் தடுக்க முயன்றார். ஆனால் பெண் என்றும் பாராமல் பச்சையம்மாளையும் அக்கும்பல் சரமாரியாகத் தாக்கி விட்டது. சேகரும், மனைவியும் படுகாயமடைந்து விழுந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் கிடைத்ததும் சேகரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு விட்டனர். அனைவரும் தர்மபுரி - பொம்மிடி சாலையில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.
டிஎஸ்பி, தாசில்தார் என பலரும் வந்து குவிந்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சேகரைத் தாக்கிய விஜயன், சுகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடிப்பழக்கம் உடல் நலனுக்கு மட்டுமல்ல, ஊர் நலனுக்கும் கூட ரொம்பவே கேடுதான்..!