அரசுக்கோ கூடுதல் "சியர்ஸ்".. குடிகாரர்களுக்கோ கண்களில் "டியர்ஸ்".. எங்க பார்த்தாலும் ஒரே சண்டை!
சென்னை: மது விலை உயர்வு தொடர்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிகாரர்கள், நேற்று கடைகளில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிட்டத்தட்ட எல்லா மதுக் கடைகளிலும் ஒரே அமளியாக இருந்தது.
மது விலையை அரசு ஏற்றியுள்ளது. கூடுதல் வருமானம் பார்ப்பதற்காக குடிமக்கள் மீது தமிழக அரசு கை வைத்துள்ளது. விலை உயர்ந்தாலும் சியர்ஸ் போடத் தயங்காதவர்கள் நமது சீரிய குடிமக்கள் என்பதால் நேற்று விலை உயர்வு அமலுக்கு வந்த நாளிலும் கூட கூட்டம் கட்டி ஏறியது கடைகளில்.
ஆனால் பல இடங்களில் விலை உயர்வைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில குடிகாரர்கள், கடை ஊழியர்களிடம் சண்டைக்குப் போனதால், கடைகளில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று முதல் அரசுக்கு கூடுதல் "சியர்ஸ்"!
நேற்று முதல் டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 6,823 டாஸ்மாக் கடைகளுக்கு புதிய விலைப்பட்டியல் நேற்று முன்தினமே அனுப்பி வைக்கப்பட்டது. இதில், ரூ.10ல் இருந்து ரூ.130 வரை மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தது.
செம வசூல்
அரசுக்கு பெருமளவு வருவாய் தருவதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை விற்பனை நடக்கிறது.
ஆனால் குடிமக்கள் கொடுத்த ஷாக்
திடீர் விலையேற்றத்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்பு இப்படி விலை அதிகரித்தபோது தினமும் ரூ.10 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைத்தது. ஆனால் தற்போதைய விலையேற்றம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தியுள்ளது.
பல இடங்களில் சண்டை
விலையேற்றம் காரணமாக பல இடங்களில் காலையில் இருந்தே குடிகாரர்கள் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். சென்னையில் மயிலாப்பூர் ரயில் நிலையம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, தி.நகர், கிண்டி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வு தெரியாத குடிகாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எடுத்துச் சொல்லியும்
விற்பனையாளர்கள் எடுத்துக்கூறியும் குடிகாரர்கள் ஏற்க மறுத்து சண்டை போட்டனர். சிலர் விலை உயர்வு காரணமாக மது பாட்டில் வாங்காமல் திரும்பி சென்றனர்.
போலீஸ் பாதுகாப்புடன்
தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடந்தது.
கடன் வாங்கி குடிக்க விட்டாங்களே....!
ஒரு குடிகாரர் அமளிக்கு மத்தியிலும் தனது "காலைக் கடனை" முடித்து விட்டு புலம்புகையில், டெய்லி 80 ரூபா கொண்டு வருவேன். அதில் 72 ரூபாய் சரக்குக்கு, மீதமுள்ள காசில் கப், வாட்டர், கடலை மிட்டாய் வாங்குவேன். கடமை முடிந்தது. ஆனால் இன்று சரக்கே 82 என்று கூறி விட்டார்கள். வந்து விட்டபிறகு போக மனமில்லை. எனவே நண்பரிடம் 10 ரூபாய் கடன் வாங்கி கடமையை முடிச்சுட்டேன் என்று கூறிச் சென்றதைப் பார்த்தபோது... என்னத்தச் சொல்ல!
குவார்ட்டரை வாங்கி 'உள் வாடகைக்கு' விட்ட குடிகாரர்!
இந்தக் கலாட்டாவிலும் காசு பார்க்க நினைத்த ஒரு குடிகாரருக்கும், இன்னொரு குடிகாரருக்கும் நடு ரோட்டில் சண்டை மூண்டதை சாலையில் சென்ற பொதுமக்கள் மூக்கை மூடியபடி பார்த்துக் கடந்து சென்றனர். ஒரு குவார்ட்டரை வாங்கி உள் வாடகைக்கு விட்டதால் வந்த சண்டை இது.!
அதாவது..!
ஒரு குடிகாரர் குவார்ட்டர் பாட்டிலை வாங்கினார். பின்னர் அதில் சற்று தேற்ற முயற்சி செய்து, யாருக்காச்சும் கட்டிங் வேணுமா என்று பாட்டிலை ஆட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தார். குவார்ட்டர் வாங்க வசதியில்லாதவரர்கள் கட்டிங் அடிப்பது வழக்கம். அவர்களைக் குறி வைத்தார் இவர். அதில் ஒருவர் படிந்து வந்தார். ஆனால் கூடுதலாக 5 ரூபாய் கேட்டதால் இரு குடிகாரர்களுக்கும் சண்டையாகி விட்டது. நடு ரோட்டில் சட்டையைப் பிடித்துக் கொண்டு இருவரும் மோத, அங்கிருந்த போலீஸ்காரர்கள் தலையிட்டு பிரித்து அனுப்பி வைத்தனர்.
அரசு சரியாகச் சொல்லவில்லை
விலை உயர்வு குறித்து தங்களுக்கு அரசு சரியாகச் சொல்லவில்லை, விலைப் பட்டியலையும் சரியாக தரவில்லை. இதனால் குடிகாரர்களிடம் நாங்கள் திட்டு வாங்க வேண்டியுள்ளது என்று டாஸ்மாக் ஊழியர்கள் புலம்புகிறார்கள்.
அந்தப் பக்கம் ஒட்டுமொத்த தமிழகப் பெண்களும் புலம்பிக் கொண்டிருக்கிறார்களே.. அதை எங்கே போய் சொல்வது டாஸ்மாக் கடைக்கார்!?