வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா? ... ஓ.பி.எஸ்ஸின் பண்ணை வீட்டில் ரெய்டு!
தேனி: வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக மற்றும் தேமுக நேரடியாக மோதுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஓ.பி.எஸ். இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப் படுவதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு நின்றிருந்த கார்களை சோதனை செய்தனர்.
ஆனால், சோதனையின் முடிவில் பணம் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள் புகார் வந்ததால் ஆய்வு செய்ததாகவும், புகாரில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.