தமிழகத்தில் 22ந் தேதியுடம் பிரசாரம் ஓய்கிறது: எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப கூடாது - பிரவீண்குமார்
சென்னை: தமிழகத்தில் 22-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்ரு பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:
இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 21 கோடியே 52 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1,94000 விதிமீறல்
17 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள நகைகள், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 1 லட்சத்து 94 ஆயிரம் விதிமீறல்கள் கண்டறியபட்டுள்ளன.
சிதம்பரம் மீதான புகார்
வாக்காளர்களுக்கு கை கடிகாரம் கொடுப்பதாக ப.சிதம்பரம் மீது நரேந்திரமோடி கூறிய புகார் பற்றி மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
கடும் நடவடிக்கை
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் சமூக வலைதளங்கள், கைப்பேசி குறுந்தகவல்கள், உள்பட எந்த வடிவத்திலும் பிரசாரம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ வீரர்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் நாளை கூடுதல் படையினர் வர உள்ளனர்.
பொது விடுமுறை
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.