ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு!
சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி:
கேள்வி: அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?.
வைகோ: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரிகளுக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது. போர் குற்றவாளியான ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை ஐ.நா. மன்றம் திரும்ப பெற வேண்டும். அப்போதுதான், ஐ.நா.வின் சுயமரியாதை காக்கப்படும். இதை ஐ.நா. மன்றத்திற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.
கேள்வி: இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆனால், நீண்ட காலமாக நீங்கள் தனி ஈழத்திற்கு குரல் கொடுத்து வருகிறீர்களே?.
வைகோ: மத்திய ஆட்சியாளர்கள் தனி ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க வேண்டும் என்றால் சுதந்திர தனி ஈழம் அமைந்தால்தான் முடியும்.
எனவே, உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
இவ்வாறு வைகோ கூறினார்.