”மாற்று தேர்தல் பணியாளர்களுக்கு ’தயிர்சாதத்துக்கு’ கூட வழி இல்லை”
சென்னை: லோக்சபா தேர்தலில் தேர்தல் மாற்று பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டிருந்த மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் சாப்பாடுகூட கிடைக்காமல் அவதிப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர்.
எப்பொழுதும் தேர்தல் பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களால் பணியில் ஈடுபட இயலாவிட்டால், அதனை நிரப்புவதற்கு மாற்று தேர்தல் பணியாளர்களும் தேர்தல் காத்திருப்பில் வைக்கப்படுவார்கள்.
தேர்தல் அதிகாரிகளுக்குத் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குப் பதில் மாற்று தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் வடசென்னை தொகுதிக்காக திருவொற்றியூரில் உள்ள வெள்ளையம் செட்டி மேல்நிலைப் பள்ளியில் 250 க்கும் மேற்பட்ட மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் சாப்பாட்டுக்குக்கூட உதவி தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று உதவித் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
அப்போது உதவி தேர்தல் அதிகாரி, மாற்றுத் தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் முடிந்த பிறகே சம்பளம் கொடுக்கப்படும். அதற்கு முன்பு எதுவும் தரப்படாது என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் தங்கள் சொந்த பணத்தைக் கொண்டே தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டு விதியை நினைத்து நொந்து கொண்டே பணியில் ஈடுபடவேண்டியதாய் போனது.