”பிஎஸ்- பிஎல்”: கட்டுப்பாட்டு அறையின் குறுஞ்செய்திகள் மூலம் கண்காணிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள்
சென்னை: தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதா என்பதை கண்காணிப்பு அறை மேற்பார்வை இட்டது.மேலும், வாக்குப்பதிவு மாலையில் சுமுகமாக முடிவடைந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைக்கானத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது.
அதில் பல்வேறு பிரமுகர்கள், பிரபலங்களும், மக்களும் அமைதியான முறையில் வாக்களித்து தங்களுடைய உரிமையை பதிவு செய்தனர்.
அமைதியான வாக்குப்பதிவு:
தமிழகம் எங்கும் மிக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளதாக சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் தேர்தல் கண்காணிப்பு அறைத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு அறை:
இந்த கண்காணிப்பு அறையில் உள்ள அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து நடவடிக்கை எடுத்தனர். இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 30 பணியாளர்கள் கொண்டு இந்த கண்காணிப்பு அறை செயல்பட்டது.
தொலைபேசி தொடர்பு:
வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகளின் தொலை பேசி எண்களைப் பதிவு செய்துக் கொண்டு, அந்த தொலைபேசியில் வரும் குறுந்தகவல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்படியாக இந்த கண்காணிப்பு அறை செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறுஞ்செய்தி கண்காணிப்பு:
அதிகாரியின் கைபேசியில் இருந்து PL என்று தகவல் வந்தால் பிரச்சினை என்று அர்த்தம். கட்டுப்பாட்டு அறையிலிருந்து என்ன பிரச்சினை என்று கேட்டு அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் கையாளப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இணைக்கப்பட்ட சாவடிகள்:
அதிகாரியின் கைப்பேசியிலிருந்து PS என்று தகவல் வந்தால் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று அர்த்தம். இவ்வாறு குறுஞ்செய்தி தொடர்பின் மூலம் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் வாக்குச்சாவடியுடன் இணைந்திருந்து தேர்தலை எந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியாக முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.