பணம் பட்டுவாடா: திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் சோதனை
திருச்சி: ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக முன்னாள் திமுக அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுத்தியுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அதிமுக வேட்பாளர் தம்பித்துரையின் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரை அடுத்து அதிமுகவினர் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்க்களிடம் இருந்த ரூ.90000 பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, பணம் வாங்கினாலோ ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. ஆனாலும் தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா கண ஜோராக நடைபெற்று வருகிறது.
தேர்தல் அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் வரும் புகாரின் அடிப்படையில் அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 60 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேரு வீட்டில் சோதனை
முன்னாள் திமுக அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுத்தியுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தில்லைநகர் 10வது கிராஸில் உள்ள நேருவின் வீட்டிற்கு, நேற்றிரவு 11 மணிக்கு வந்த தாசில்தார் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழு சோதனை நடத்துவதாக தெரிவித்தனர்.
தூங்கிய நேரு
அப்போது அங்கிருந்த நேருவின் உதவியாளர் முத்துச்செல்வம், புதுக்கோட்டை கூட்டம் முடித்து ஸ்டாலினை சென்னைக்கு அனுப்பிவிட்டு அண்ணன், அசந்து உள்ளே நேரு தூங்குவதாக சொல்லி அதிகாரிகளை காக்க வைத்தார். உள்ளே சோதனை நடத்தியே ஆகவேண்டும் என அடம்பிடித்த அதிகாரிகள், அங்கேயே காத்து கிடந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு சோதனை
அதிகாலை 4 மணி வரை தூக்கம் கலைந்து வெளியே வந்த நேரு, வீட்டின் முன் கூட்டம் அதிகமாக இருக்கிறது என விசாரிக்க, அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கும் தகவல் சொல்லப்படவே, சோதனை நடத்த சொல்லியிருக்கிறார் நேரு.
பணம் எதுவும் இல்லை
உள்ளே சென்ற அதிகாரிகள், ஒவ்வொரு அறையாக காலை 7 மணி வரை சோதனை நடத்தியுள்ளனர். இறுதியாக பணம் ஏதும் சிக்காத நிலையில் அதிகாரிகள் திரும்பினர்.
திட்டமிட்ட செயல்
இந்நிலையில் நேருவின் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது திட்டமிட்ட செயல் என்றும், அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தடுக்க நேரு வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக கண்காணிக்கவே அதிகாரிகள் நாடகம் நடத்தியுள்ளார்கள் எனவும் புகார் கூறுகின்றனர் தி.மு.க.வினர்.நேருவின் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரு மறுப்பு- ஆட்சியர் விளக்கம்
இதனிடையே தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கே.என். நேரு தமது வீட்டில் சோதனை நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் திருச்சி மாவட்ட ஆட்சியரோ தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் நேரு வீட்டில் சோதனை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.
கரூர் தம்பித்துரைக்கு போட்டி
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும், திமுக வேட்பாளர் சின்னசாமிக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது. பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக தம்பிதுரை பின்தங்கி வந்தார்.
இலவச வேட்டி சேலை
இந்த நிலையில், கடந்த 18 ம் தேதி இரவு அன்று அ.தி.மு.க. சார்பில், கட்சி பாகுபாடு பாராமல், அனைத்து வீடுகளுக்கும் இலவச வேட்டி சேலையை வாக்காளர்களுக்கு சப்ளை செய்தனர்.
பணம் பட்டுவாடா
இந்த நிலையில், கரூர் நகராட்சி 24 வது வார்டு கருப்பாயி கோவில் தெருவில், வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுவதாக, கரூர் எஸ்.பி.ஜோஷி நிர்மல்குமாருக்கும், பறக்கும் படை அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
பறக்கும் படை சோதனை
இதனையடுத்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது, வாக்காளர்களுக்கு சிலர் பணம் கொடுத்தது தெரியவந்தது.
உடனே, கருப்பாயி கோவில் தெருவுக்கு எஸ்.பி., ஜோஷி நிர்மல் குமார் விரைந்து சென்று, பணம் பட்டுவாடா செய்தவர்களை பிடித்து, கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
5 பேர் கைது
அங்கு, போலீஸார் நடத்திய விசாரணையில், வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தவர் 24 வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் மோகன் மற்றும், கிஷன், ரமேஷ், அரவிந்த், நாராயணன் என தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ 90,450 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதிமுக நிர்வாகி வீட்டில் சோதனை
இதேபோல சிவகாசி நாரணாபுரத்தில், அ.தி.மு.க., இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகி மகேஸ்வரி, அ.தி.மு.க., பிரமுகர் பாலகுருசாமி மூலம், ஓட்டுக்கு பணம் வழங்குவதாக, தேர்தல் பிரிவிற்கு ம.தி.மு.க.,வினர் புகார் செய்தனர்.
நோட்டுக்கள் பறிமுதல்
தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், மகேஸ்வரி வீட்டை சோதனை செய்தனர். வாக்காளர் பெயர்கள் எழுதப்பட்டிருந்த, சில நோட்டுகளை கைப்பற்றினர். இதே போல், பாலகுருசாமி வீட்டையும் சோதனை செய்து, வாக்காளர் பெயர் எழுதிய நோட்டுகளை கைப்பற்றினர்.
ராஜபாளையத்தில் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானததில் அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் அம்மாசி கனி வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் வந்தது. பஞ்சாயத்து அலுவலகத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் மொய் கவரில் தலா 200 ரூபாய் வீதம் போட்டு வைத்திருந்த ரூ.25 ஆயிரத்து 750 கைப்பற்றப்பட்டது.
காங்கிரசார் கைது
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பரவலாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கக்கோரி மறியல் செய்த காங்கிரசார் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.